ஆப்நகரம்

ஆட்டுக்குட்டிக்கு கூட சாதி இருக்கா? காலில் விழவைத்தது ஏன்?

​​ தாக்கியதோடு மட்டுமல்லாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன், காலில் விழுவதை உள்நோக்கத்துடன் வீடியோவும் எடுத்துள்ளனர்.

Samayam Tamil 13 Oct 2020, 1:02 pm
கோவில்பட்டி அருகே தலித் இன நபரைக் காலில் விழவைத்த விவகாரத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காலில் விழ வைக்கும் அளவுக்கு அப்படி என்ன சம்பவம் நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
Samayam Tamil காலில் விழவைத்த காட்சி


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள ஓலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். 100 ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்தவர் சங்கிலி என்பவரது மகனான சிவசங்கு. இவரும் சுமார் 100 ஆடுகளை வைத்துத் தொழில் செய்து வருகிறார். பால்ராஜுக்கும் சிவசங்குவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக ஆடு மேய்ப்பது தொடர்பாக மனக்கசப்பு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி ஆடு மேய்த்துகொண்டிருந்த பொழுது பால்ராஜின் பட்டியிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டி சிவசங்குவின் பட்டிக்குள் சென்றுள்ளது. இதைப் பிடிக்க பால்ராஜ் சிவசங்குவின் ஆடுகளின் பக்கம் வந்திருக்கிறார். இந்நிலையில், பால்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டிய சிவசங்கு, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு உங்களுக்கெல்லாம் இவ்வளவு திமிரா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.



இதனை எதிர்த்துப் பேசி சத்தம் போட்டுள்ளார் பால்ராஜ். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஆட்களை வரவழைத்துத் தாக்கியுள்ளார். தாக்கியதோடு மட்டுமல்லாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன், காலில் விழுவதை உள்நோக்கத்துடன் வீடியோவும் எடுத்துள்ளனர்.

தலித் உடலை மயானத்தில் புதைக்க கூடாது- ரியஸ் எஸ்டேட் ஆணவம்!

8 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து அவமானப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், 12ஆம் தேதி கயத்தாறு காவல் நிலையத்தில் பால்ராஜ் புகாரளித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கு, சங்கிலி பாண்டியன், உடையம்மாள்,பெரிய மாரி, வீரய்யா, மகேந்திரன் மற்றும் மகாராஜன் ஆகிய 7 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி