ஆப்நகரம்

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு உண்மைதான்: மா சுப்பிரமணியன் திருச்சியில் ஒப்புதல்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்களில் மன அழுத்தம் உள்ள மாணவரளை கண்டறிந்து ஆலோசனை வழங்கும் பணியில் 333 மன நல மருத்துவர்களும்,மன நல ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்- மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சியில் பேட்டி.

Samayam Tamil 26 Sep 2021, 12:01 pm
திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு சிவராசு உள்ளிடோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு உண்மைதான்: மா சுப்பிரமணியன் திருச்சியில் ஒப்புதல்!


அதனைத்தொடர்ந்து 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளின் தலைவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

திருச்சியில் மொத்தம் 515 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 353 மையங்களும், நகரப்பகுதிகளில் 162 மையங்களும் அடங்கும். இன்று ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேடியோ தெரபி சிகிச்சை வழங்குவதற்கான தனி துறை ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்காக 21 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு முதல்வர் ஒதுக்கியுள்ளார்.

அத்துறைக்கு தேவையான கருவிகள் 25 நாட்களுக்குள் வாங்கி நிறுவப்படும். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.

பாதி பேர் போட்டியின்றி தேர்வு... திருச்சியில் சூடு பிடிக்காத உள்ளாட்சித் தேர்தல்!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்களில் மன அழுத்தம் உள்ள மாணவரளை கண்டறிந்து ஆலோசனை வழங்கும் பணியில் 333 மன நல மருத்துவர்களும்,மன நல ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 80 விழுக்காடு மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் சுமார் 200 மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம். இந்தியாவில் இத்தகைய நல்ல நடைமுறை தமிழ்நாட்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டிற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை என முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்.
இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன் குணா சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி