ஆப்நகரம்

வைகுண்ட ஏகாதசி...வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரெங்கநாதர்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வேடுபறி வைபவம் இன்று நடைபெற்றது.

Samayam Tamil 1 Jan 2021, 9:13 pm
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15 ஆம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்கியது.
Samayam Tamil திருச்சி ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் வேடுபறி வைபவம்


பகல்பத்து உற்சவத்தின் 10 ஆவது நாளான 24 ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இராப்பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8 ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயிலின் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார்.

திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தார். அவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள், அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி வைபவமாகும்;. வேடுபறி வைபவத்தின் ஒருபகுதி இன்று நடத்திக்காட்டப்பட்டது.

விழாவின் 10 ஆம் திருநாளான 3 ஆம் தேதி தீர்த்தவாரியும், 4- ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

அடுத்த செய்தி