ஆப்நகரம்

தீபாவளியும், மணப்பாறை முறுக்கும்!

தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது முறுக்குதான். முறுக்கு என்றதும் உடனே நம் எண்ணத்தில் எழுவது திருச்சி மணப்பாறை.

Samayam Tamil 11 Nov 2020, 7:00 pm
தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது முறுக்குதான். முறுக்கு என்றதும் உடனே நம் எண்ணத்தில் எழுவது திருச்சி மணப்பாறை. யுடியூப் பார்த்து வகை வகையான திண்பண்டங்களை இல்லதரசிகள் தயார் செய்யும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் மவுசு குறையாத திருச்சி, மணப்பாறை முறுக்கு எப்படி இந்த அளவுக்கு பிரபலமடைந்தது என்பது குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.
Samayam Tamil you should know some interesting facts about manapparai murukku in this deepavali
தீபாவளியும், மணப்பாறை முறுக்கும்!


கிருஷ்ண ஐயருக்கு தோன்றிய ஐடியா!

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில் பயணங்களில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். அப்படியொரு ரயில் பயணத்தில், திருநெல்வேலியில் இருந்து வந்த கிருஷ்ண ஐயர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மணப்பாறை ரயில் நிலையத்தில் முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். இப்படி மணப்பாறை முறுக்கு பிரபலமாக காரணகர்த்தாவாக திகழ்கிறார் மணி ஐயர். இன்றும் மணி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது இந்தத் தொழிலை செய்து வருகின்றனர். அத்துடன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்துவரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மணப்பாறையில் இன்றைக்கும் உள்ளன.

தண்ணீர்தான் காரணம்!

எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், வீடுகளில் ஈசியாக செய்யக்கூடியதுமான திண்பண்டமாக முறுக்கு திகழ்கிறது. ஆனாலும் மணப்பாறை முறுக்குக்கு மட்டும் ஏன் இன்னும் இவ்வளவு மவுசு என்று பார்த்தால்,அதற்கு அந்த ஊரின் தண்ணீர் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. எந்த ஊரிலும் நீரின் சுவையைப் பொறுத்து உணவு வகைகளின் சுவை மாறுகிறது என்பது உண்மை. இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக உள்ளது மணப்பாறை. இந்த ஊரில் தண்ணீர் இயல்பாகவே லேசான உப்புச் சுவையுடன் இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் முறுக்குக்கும் தனிச்சுவை கிட்டுகிறது.

மணப்பாறை முறுக்கின் வகைகள்

முறுக்கு என்றால் அரிசியை மாவாக அரைத்து, அதனை மாவாக பிசைந்து எண்ணெய்யில் வறுத்தெடுப்பது என்றுதான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால். இந்த முறுக்கில் எவ்வளவு வெரைட்டிகள் இருக்கின்றன என்று மணப்பாறைக்கு வந்தால்தான் தெரியும். கடலை மாவு முறுக்கு, அரிசி முறுக்கு, நெய் முறுக்கு,,சிறுதானிய முறுக்கு, கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, தேன்குழல் முறுக்கு, ஓம முறுக்கு, பூண்டு முறுக்கு என்று மணப்பாறையில் தயாரிக்கப்படும் முறுக்கு வகைகளின் பட்டியல் 1000 வாலா சரவெடி போல நீண்டு கொண்டே போகிறது.

மணப்பாறைக்கு சர்வதேச மவுசு!

: மணப்பாறை முறுக்கிற்கு தமிழகம், தென் மாநிலங்கள், வடமாநிலங்கள் என்று உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இன்றும் தனி மவுசு உள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலோர் தங்களது வாழ்நாளில் திருச்சியை கூட தாண்டியதில்லை ஆனால் அவர் தயாரிக்கும் சுவையான மணப்பாறை முறுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ரோம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக பெருமைப் பொங்க கூறுகின்றனர் முறுக்கு உற்பத்தி தொழிலில் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டுவரும் மணப்பாறை தொழிலாளர்கள்.

புவிசார் குறியீடு வழங்கப்படாதது ஏனோ?

தமிழகத்தின் பெருமையை சர்வதேச அளவில் பசைசாற்றுவதில் மணப்பாறை முறுக்கிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாது. மூன்று தலைமுறைகளை கடந்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கோலோச்சி இருக்கும் மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதும் மணப்பாறை மக்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் இதுநாள்வரை நிறைவேற்றாதது ஏனென்று தெரியவில்லை. மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படாததால் இத்தொழிலை செய்துவரும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற இயலாமலும், இத்தொழிலை நவீன காலத்திற்கேற்ப அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாமலும் தவித்துவரும் அவலநிலை நீடித்து வருகிறது.

அடுத்த செய்தி