ஆப்நகரம்

பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் மோடி: முத்தரசன் தாக்கு!

பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று முத்தரசன் கூறினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 1 Dec 2022, 4:20 pm
நம் நாடு பல மதம் சாதிகளை கொண்டது. எனவே பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க இயலாது. பாஜக ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கரங்களில் உள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று நெல்லையில் நடைபெற்ற ஏஐடியுசி மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
Samayam Tamil mutharasan


நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஐடியூசி மாநில தலைவர் சுப்பராயன் மற்றும் பொதுச் செயலாளர் மூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து நினைவு ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாநாட்டை தொடக்கி வைத்தனர்.
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? விளக்கும் ராமதாஸ்
மாநாட்டில் முத்தரசன் பேசும்போது, “வாஜ்பாய் உள்பட மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த அனைவரும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். ஆனால் பிரதமர் மோடி எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனங்களை கூட உருவாக்கவில்லை ஏற்கனவே இருந்த அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்கிறார்.

தொழிலாளிகள், மாணவர்கள் விவசாயிகள் உள்பட அனைவருக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது தேசிய கல்வி கொள்கை என்கிற பெயரில் பட்டியல் இனத்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் கல்வி மறுக்கப்படும் வாய்ப்புள்ளது. டெல்லியில் விவாசாயிகள் போராடி 200 விவசாயிகளை பலிகொடுத்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற செய்தார்கள். ஆனாலும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு என கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டனர். தற்போது தேர்தல் நெருங்குவதால் வேலை வழங்குவதாக கூறுகின்றனர். மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசாக ஒன்றிய அரசு உள்ளது மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுப்படுத்துகிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
ஒரே நாடு ஒரே மதம் எப்படி சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது. நம் நாடு பல மதங்களை கொண்ட நாடு. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. 4600க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. மொழி மத சாதி வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் என உலக நாடுகள் நம்மை போற்றுகிறது. இந்த அரசு ஆர்.எஸ்.எஸ் கரத்தில் உள்ளது. அதனுடைய மனு தத்துவத்தை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்த எல்லா முயற்சிகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளி என்ற பெயரில் தான் அனைவரும் ஒன்று சேர முடியும். அது தான் சாத்தியம். பொது சிவில் சட்டம் ஒரு போதும் ஏற்க இயலாது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும். 2024 தேர்தலில் மோடி அரசை தோற்கடிக்க முடியும் தோற்கடிக்க வேண்டும்” என்று பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சுப்பராயன், “டிசம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய அளவிலான ஏ.ஐ.டி.யூ.சி மாநாடு நடைபெறுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக தொழிலாளர் விரோத போக்கினை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் நலனை மத்திய அரசு கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி