ஆப்நகரம்

வயலில் களை எடுக்க ஆள் இல்ல... உங்க ஆபீஸ்ல இருக்குறவங்கள அனுப்புங்க - தென்காசி ஆட்சியரை அதிர வைத்த விவசாயி!

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி விடுத்த வித்தியாசமான கோரிக்கை சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 1 May 2023, 6:52 am
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெற்கட்டும் சேவல் ஊராட்சி பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவரும் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவை படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
Samayam Tamil tenkasi collectorate
tenkasi collectorate


விவசாயி கொடுத்த 'ஷாக்'

அவரது மனுவில், தனது ஊரில் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், 100 நாள் வேலை திட்டம் பணிகள் நடைபெறுவதால் தனக்கு களை எடுப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மழைநீர் ஒழுகிய அவலம்: செய்தி வெளியான நிலையில் உடனடி ஆக்சன்!
எனவே, ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருந்தால் அவர்களைக் களையெடுக்கும் பணிக்கு டெபுடேஷனில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு ஆகியவற்றுடன் உரிய கூலியையும் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மகேஸ்வரன் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வைரலாகும் விவசாயியின் மனு

viral petition


விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை மிகக் கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில் மகேஸ்வரனின் இந்த மனு ஆட்சியர் அலுவலக வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் அளித்த மனு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என பல்வேறு கிராமங்களில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்திலும் விவசாய கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறியதுடன் மட்டுமில்லாமல் ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்களையே வயலில் களை எடுக்கும் வேலைக்கு அழைத்த விவசாயியின் செயல் சுற்றுவட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி