ஆப்நகரம்

தென்காசி ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 Feb 2023, 4:06 pm
தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகளில் 4ஆவது மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் ஆகாஷ். அவர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளில் திறம்பட செயல்பட்டதுடன், மாவட்டத்தின் முக்கிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் அகற்றி நடவடிக்கை எடுத்தார். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தி பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தினார்.
Samayam Tamil tenksi akash collector


இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நேர்மையாக நடத்தி தேர்வின் மூலம் 53 கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் பயன்பெற முடியாமல் தவித்த அரசியல் கட்சியினர் ஆட்சியர் ஆகாஷ் குறித்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு தொழில் திறனாய்வு பிரிவு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷின் இடமாற்றத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவரை மீண்டும் தென்காசி மாவட்டத்தில் பணி செய்ய உத்தரவிட கோரியும் மாவட்ட முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

ஈரோடு கிழக்கு - செந்தில் பாலாஜி போட்ட ஸ்மார்ட் பிளான்: அதிருப்தியாளர்கள் காட்டில் அடைமழை!

இந்த நிலையில் இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அனைத்து விவசாய சங்கத்தினர் மாநிலத் துணைத் தலைவர்களான ஜாகிர் உசேன் கண்ணையா ஆகியோர் தலைமையில் நூதன முறையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக வால்போஸ்டர்களை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷின் இடமாற்றம் ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி