ஆப்நகரம்

அதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புரேவி' புயலின் விளைவாக நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நாளை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 10:12 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புரேவி' புயலின் விளைவாக நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நாளை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து மழை தொடர்பான பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிலிப்புகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
Samayam Tamil heavy rain warning nellai district administration taking all precautionary measures
அதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்!



நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கனமழை அறிவிப்பையடுத்து நெல்லை மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால். ஆற்றங்கரையோரங்களில் வசிப்போரும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று, இடிந்துவிழும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களில் வசிப்போரும் உரிய பாதுகாப்பான இடங்களுக்கோ, அரசின் நிவாரண முகாம்களுக்கோ இடம்பெயரும்படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, அரசின் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவைப்பட்டால் திசையன்விளை, ராதாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு நிவாரண மையங்களில் தங்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்குவோர் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 மணிநேர அவசர சேவை மையம்

கனமழையின் காரணமாக பேரிடர்கள் ஏற்பட்டால் அவைகுறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவசர உதவிகளை கோரவும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால சேவை மையம் 24 மணிநேரமும் செயல்படும். மழைக்கால உதவிகள் தேவைப்படும் 0462 2501070 மற்றும் 0462 2500191 எண்களில் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ் அப் உதவி எண்களும் அறிவிப்பு

நெல்லை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களையும் பேரிடர், அவசரகால தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதற்கான வாட்ஸ் அப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -63740 01902, நெல்லை வட்டாட்சியர் அலுவலகம் -94450 00671, பாளையங்கோட்டை -94450 00669, மானூர் -94422 14727, சேரன்மகாதேவி -97515 01322, அம்பாசமுத்திரம் -94450 00672, நாங்குநேரி -90805 89731, ராதாபுரம் -96777 81680, திசையன்விளை -99443 06770

அடுத்த செய்தி