ஆப்நகரம்

மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு சீல்?; பெற்றோர்கள் திடீர் முடிவு;போலீஸ் குவிப்பு!

மாணவர்களை வெளியேற்றி அதிரடியாக பள்ளிக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்ததால் பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Samayam Tamil 30 Jun 2022, 9:48 pm
நெல்லை டவுன் ஜவகர் தெருவில் அரசு உதவியின் கீழ் உசைனியா தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுக்கு மேல் இந்த பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியை சுற்றியுள்ள பகுதி மக்களின் குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
Samayam Tamil மாணவர்கள் பாடம் பயில்கின்றனர்
மாணவர்கள் பாடம் பயில்கின்றனர்


இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளி செயல்பட்டு வரும் இடத்தின் உரிமையாளர்கள் என சொல்லப்படும் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்து 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பள்ளி நிர்வாகம் இடத்தை காலி செய்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்த நிலையில் அதுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தடையாணை கோரிய நிலையில் அந்த மனுவும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற ஊழியர்கள் பள்ளிக்கு சீல் வைக்க வந்துள்ளனர். பள்ளி இன்றைய தினம் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளி மூடி சீல் வைக்கப்பட்டதை அறிந்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்குள் உரிய முடிவை பள்ளி நிர்வாகம் எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிமன்ற ஊழியர்கள் சொல்லிவிட்டு சென்றனர்.

எடப்பாடியின் மகா ரகசியம்; போட்டு உடைத்தது பாஜக!

இதை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் பள்ளி தொடர்ந்து இதே இடத்தில் தொடர்ந்து செயல்படவும் அரசு நடவடிக்கை எடுக்க கோரி தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காவல் துறை அதிகாரிகள் தர்ணா நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய தீர்வை மாலைக்குள் சொல்வதாக அங்கிருந்து அவர்களை கலைத்து அனுப்பி வைத்தனர்.

பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளி இடத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்கின் காரணமாக பள்ளிக்கு திடீரென நீதிமன்ற ஊழியர்கள் சீல் வைக்க வந்ததால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் செய்வதறியாத திகைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி