ஆப்நகரம்

காரணம் சொல்லாம பிரேதத்த இறக்காத... எல்லையில் இறந்த ராணுவ வீரர் குடும்பம் போராட்டம்

தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் நடந்தவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள அழைப்பு வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை.

Samayam Tamil 13 Oct 2020, 6:50 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வந்த நிலையில் அவரது உறவினர்கள் அவரின் இறப்பிற்கான உண்மையான காரணம் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு உடலை பெற்று இறுதி மரியாதை செய்தனார் .
Samayam Tamil உறவினர்கள் போராட்டம்


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைராஜ் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். திருமணம் நடைபெறாத நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பணியாற்றி வரும் முல்லை ராஜ் கடந்த 11ஆம் தேதி பணியில் இருந்தபோது திடீரென இறந்து விட்டதாக அவரது தாய் அழகம்மாளுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.

தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் நடந்தவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள அழைப்பு வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தாயார் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தனது மகன் முல்லைராஜ் இறப்பிற்கான உண்மைத் தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ரஜினி வந்தால் என்ன நடக்கும்? வராவிட்டால் என்ன செய்யவேண்டும்? இபிஎஸ் போடும் திட்டம்!

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் விசாரித்ததில் முல்லைராஜ் இறந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டடு, ஜம்மு காஷ்மீரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் சாலை மார்க்கமாக சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்டோர் முல்லை ராஜ் இறப்பிற்கான காரணம் என்ன , அவர் எப்படி இறந்தார் என முழு விளக்கம் கேட்டு நெல்லை - சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இராணுவ அதிகாரி சக்திவேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முல்லைராஜ் எவ்வாறு இறந்தார் என்பது பற்றி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரிவிக்க முடியும் என்றும், அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க இராணுவத்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி கண்டிப்பாக வழங்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் உறவினர்கள் உடலை பெற்று இறுதி மரியாதை செய்ய அனுமதித்தனர். இதையடுத்து முல்லைராஜ் உடலானது அவர்களது சொந்த தோட்டத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏரளமானோர் அஞ்சலி செலுத்திய பின்னர் இராணுவ மரியாதையின்றி சாதரணமாக அங்கயே தகனம் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி