ஆப்நகரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பஞ்சர் ஆன நெல்லை: சரிசெய்யப்படுமா?

நெல்லை மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகப் போக்குவரத்திற்குச் சிரமமாக உள்ளது.

Samayam Tamil 20 Jan 2021, 6:33 pm
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ. எல். எஸ் லட்சுமணன் தலைமையில் திமுகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் தரையில் அமர்ந்தும் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பஞ்சர் ஆன நெல்லை: சரிசெய்யப்படுமா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பஞ்சர் ஆன நெல்லை: சரிசெய்யப்படுமா?


நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காகப் பாதாளச்சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப் பணி என மாநகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாகக் கிடக்கிறது.

ஒரு பணி தொடங்கப்பட்டு அதனை முடிப்பதற்குள் அடுத்த பணிகளைத் தொடங்கி மாநகராட்சி பகுதி முழுவதும் பணிகள் தேக்கம் அடைந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்ததன் காரணமாகச் சாலைகள் மேலும் குண்டும் குழியுமாக ஆனதுடன் சேரும் சகதியுமாகவும் காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நெல்லை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. எல். எஸ் லட்சுமணன் தலைமையில் திமுகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடேங்கப்பா... நெல்லை சீமையில் இத்தனை ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களா?

மாநகராட்சி ஆணையர் வரத் தாமதமானதால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டமும் செய்தனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அலுவலகம் வந்த போது அவரையும் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாகச் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அடுத்த செய்தி