ஆப்நகரம்

பள்ளி மாணவர்கள் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்ற கார்!

குளித்துவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவரைத் தூக்கி வீசி கொன்றுவிட்டு, நிற்காமல் பறந்து சென்ற கார் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

Samayam Tamil 20 Oct 2020, 12:14 am
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்திற்குக் காரணமான வாகனம் அந்தப் பகுதியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் நிற்காமல் சென்ற வாகனத்தைப் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பலியானவரின் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செய்யச் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பெரும்பத்தூர் அருகே உள்ள ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் மனைவி ராக்கம்மா. மகன் மதியழகன். இவர் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் பெரும்பத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார். மதியழகனும் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் இளவரசன் என்பவரும் சேர்ந்து கிணற்றில் குளிக்க சைக்கிளில் சென்றுள்ளனர்.

கிறிஸ்தவ கல்லறையை நாசமாக்கிய இந்து அமைப்பினர், குண்டாஸ் வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கோரிக்கை!

குளித்துவிட்டு பெரும்பத்தூர் வழியாகச் செல்லும் சங்கரன்கோவில் –ராஜபாளையம் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த கார் சைக்கிளில் வந்த மதியழகன், இளவரசனை மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கிவீசப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திலே மதியழகன் உயிரிழந்தார். இளவரசன் படுகாயத்துடன் காணப்பட்டார். உடனடியாக இளவரசனை மீட்ட அப்பகுதி மக்கள், முதலுதவி அளித்ததோடு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மோதிய வாகனத்தில் அதிமுக கொடி கட்டப்பட்டிருப்பதாகச் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி