ஆப்நகரம்

பெண்கள் மீது அக்கறை என்றால் மனுதர்மத்தை எதிர்க்கத்தான் வேண்டும்... முத்தரசன் பேட்டி

திருமாவளவன் மீது அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்யும் சென்னை காவல் ஆணையாளர் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீது ஆபாசமான விமர்சனங்கள் வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

Samayam Tamil 24 Oct 2020, 3:22 pm
திருமாவளவன் பெண்களைக் குறித்து அவதூறாகப் பேசியதாக காணொலித் துணுக்கு ஒன்று பரவியதையடுத்து இந்து அமைப்புகள், திருமாவளவனுக்கு எதிராக புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மனு தர்மத்தை தான் எதிர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் தெரிவித்துள்ளார் .
Samayam Tamil முத்தரசன்



இதுகுறித்து நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “விடுதலைச்சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது பெண்களை அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜகவை சேர்ந்த குஷ்புவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார் ஏன் சனாதனத்தை எதிர்த்தார் என்ற கேள்விக்கு தான் திருமாவளவன் உரையாற்றினார்.

அதில் பெண்களை பற்றி மனு தர்மம் சொன்னதைத்தான் திருமாவளவன் பேசினார். பெண்கள் குறித்து ஒரு வார்த்தை கூட இழிவாக பேசவில்லை. எழுதப்படாத சட்டமாக இருக்கும் மனு தர்மத்தில் தான் பெண்கள் பற்றி இழிவாக எழுதப்பட்டிருக்கிறது.

திருமாவுக்கு துணை நிற்கும் ஸ்டாலின்: மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது!

பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மனு தர்மத்தை தான் எதிர்க்க வேண்டும். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ததும் , அவர் குறித்து வன்மத்துடன் பேசுவது கண்டிக்கதக்கது. திருமாவளவன் மீது அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்யும் சென்னை காவல் ஆணையாளர் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீது ஆபாசமான விமர்சனங்கள் வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி