ஆப்நகரம்

மோதிரங்களை விழுங்கிய மீன் வியாபாரி.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

திருப்பூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து நபர் ஒருவர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 May 2022, 6:50 am
திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி காஜா( வயது 35), சதாம் உசேன், உதயகுமார் உள்பட 4 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சதாம் உசேனை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
Samayam Tamil Tirupur Ring News


இதில், படுகாயமடைந்த சதாம் உசேன் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட காஜா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் வாகனத்தில் ஏற்றி திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது காஜா என்பவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து திடீரென தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி விழுங்கினார்.

சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தொடர் அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணைக்கு பயந்து நபர் ஒருவர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி