ஆப்நகரம்

நூல் விலை குறைவு.. பின்னலாடை நிறுவனங்களுக்கு நிம்மதி!

திருப்பூரில் நூல் விலை குறைந்துள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளதாக அதனை சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2022, 11:28 am
திருப்பூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
Samayam Tamil tirupur knitting industry
கோப்புப்படம்


இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் இழப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நூல் விலை உயர்ந்திருந்தது. மே மாதம் மேலும் ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன இதனால் திருப்பூர் தொழில் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் அனைத்து நூல்களுக்கும் ரூ.40 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.293-க்கும், 24-ஆம் நம்பர் ரூ.305-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.315-க்கும், 34-ஆம் நம்பர் ரூ.335-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.355-க்கும், 20-ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.295-க்கும், 24-ஆம் நம்பர் ரூ. 300-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.305-க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 325-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.345-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்களை பெற முடியாமல் பல நிறுவனங்கள் மூடப்பட்டும்,பல நிறுவனங்கள் பாதியளவு மட்டும் இயங்கி வந்தன. நூல் விலை ரூ.40 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி