ஆப்நகரம்

தண்ணீர் கிடைக்காம நகர மாட்டோம் விவசாயிகள் தொடர் போராட்டம்!

உரியத் தண்ணீரைக் கேட்டு பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், காங்கேயம் காளையை பொதுப்பணித்துறை வளாகத்தில் அனுமதிக்கக் கோரி சாலை மறியல், 2ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்.

Samayam Tamil 1 Sep 2021, 5:54 pm
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரியத் தண்ணீரை வழங்காததால், விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை நேற்று சிறைபிடித்து மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலேயே உணவு சமைத்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இன்று 2அவது நாளாக நாய் மற்றும் காளையுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
Samayam Tamil தண்ணீர் கிடைக்காம நகர மாட்டோம் விவசாயிகள் தொடர் போராட்டம்!


திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை மூலம் செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம். இத்திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகிறது.

ஒவ்வொரு சுற்றுத் தண்ணீர் திறப்பின் போதும் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உள்ள 240 கன அடி நீரில் 50 சதவீதமான 120 கன அடி தண்ணீர் கூட வருவதில்லை எனக் கூறி கடந்த மார்ச் மாதம் காங்கேயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினர். இந்நிலையில் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து 4 நாளில் உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டு,உரிய நீர் வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நான்காம் மண்டலம் இரண்டாவது சுற்றுக்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரியத் தண்ணீர் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம் நடத்தி இரவு சமையில் பொதுத்துறை அலுவலகத்தில் பதற்றம்!
இதனைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்திலேயே இரவு உணவைச் சமைத்துச் சாப்பிட்டு அங்கேயே காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இரண்டாவது நாளாகத் தொடரும் இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் சாமியான பந்தல் அமைத்து,நாயுடன் காத்திருப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கேயம் காளையைப் போராட்ட பகுதிக்கு அழைத்து வந்தனர். ஆனால் காவல்துறையினர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அனுமதிக்க மறுத்ததால் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கேயம் திருப்பூர் சாலையில் காளையை நிறுத்தி போக்குவரத்தை மறித்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் காளையைச் சாலையின் ஓரமாகக் கட்டிவைக்க காவல்துறையினர் அனுமதித்தால் விவசாயிகள் சமாதானமடைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி