ஆப்நகரம்

வட்டி கேட்டு இம்சை செய்த பைனான்ஸ் நிறுவனம்... கடுப்பான மக்கள்!

ஊரடங்கு காலத்தில் வட்டி கேட்டு தொந்தரவு செய்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 22 May 2020, 8:54 pm
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கொடுத்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு சிரமப்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Samayam Tamil Tiruppur Bajaj finance


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மூன்று மாதம் வரை இஎம்ஐ கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்நிலையில் திருப்பூர் அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இஎம்ஐ தொகையை கட்டுமாறு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளது. மேலும் வங்கிகளில் போதுமான பண இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவித்து வரும் சூழலில், இதுபோன்று வங்கியிலிருந்து இஎம்ஐ கட்டுவதற்கு குறுந்தகவல் மற்றும் தொலை பேசியில் அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி