ஆப்நகரம்

4 ஆண்டில் ஒன்றரை லட்சம் பனை விதைகள் நடவு… ’தானா சேர்ந்த கூட்டம்’ அசத்தல்!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பனை விதைகளை நடவு செய்து அசத்தியுள்ளனர்.

Samayam Tamil 26 Sep 2021, 11:03 pm
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து வந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாரம் முழுவதும் பணி செய்யும் இவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படுகிறது.
Samayam Tamil திருப்பூர்


குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையை பலர் தங்களது விடுமுறை நாளாக தேர்வு செய்கின்றனர். விடுமுறை நாளையும் வீணாக கழிக்காமல் சமூக பொறுப்புடன் ’பனை காக்கும் நண்பர்கள்’ என்ற குழுவை உருவாக்கி அதில் நூற்றுக்கணக்கானோரை இணைத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள குளம், குட்டை, ஏரி மற்றும் ஆற்றங்கரையோரங்களில் பனை நடவு செய்யும் பணியை செய்து வருகின்றனர் சில உன்னத மனிதர்கள்.

காலை 7 மணிக்கு மண்வெட்டி, கடப்பாரை,அரிவாள், குடம் உள்ளிட்டவைகளுடன் ஆறு, குளக்கரையை அடையும் நபர்கள், குழுவாக இணைந்து பனை நடவுக்காக பள்ளம் தோண்டுவது, விதை நடவு செய்வது, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவது என அவரவர் வேலையை பங்கிட்டுக்கொண்டு சிறப்பாக செய்ய தொடங்குவார்கள்.

ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என ஆர்வத்துடன் களப்பணியில் செய்யும் இவர்கள் சீமை கருவேல மரங்களை இயந்திர உதவி இன்றி மனித உழைப்பால் மட்டுமே எவ்வித செலவும் இன்றி அகற்றி வருகின்றனர். ஒரு புறம் அப்பணிகள் சூடு பிடிக்க மறுபுறம் சிலர் ஏற்கனவே சேகரித்து எடுத்து வந்த பனை விதைகளை நடவு செய்வதும், நடப்பட்ட புங்கன், வேம்பு அத்தி, மூங்கில் உள்ளிட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.

திருப்பூரை சுற்றி உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய குட்டைகள், குளங்களில் முதலில் இப்பணிகளை செய்த இக்குழு, தற்போது கவுசிகா நதியின் கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அங்கு பல்வகை மரங்களையும் நடுவதோடு நமது மாநில மரமான பனை பரவலை உறுதிபடுத்தும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்களால் வழங்கப்படும் பனை விதைகளை நடவு செய்யும் பணியை முதன்மையாக செய்து வருகின்றனர்.

கடந்த 4 வருடங்களில் இக்குழு மூலம் நடவு செய்த பனை விதைகள் மட்டும் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேலிருக்கும். ஏற்கனவே நடவு செய்த பனை விதைகள் தற்போது முளைத்து இலைகள் விட்டு வளர்ந்து இக்குழுவினரை மட்டும் அல்லாது காண வரும் அனைவரையும் வரவேற்கிறது.

கடந்த 2017 ல் ஆரம்பித்த பனை விதைக்கும் பணி, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தடைபட்டது. ஆனாலும் தளர்வுகள் அளித்தவுடன் மீண்டும் தொடங்கிய பணி தற்போது 105-வது வாரத்தை எட்டியுள்ளது.
எந்த விளம்பரமும், பெரிதாக ஊடக வெளிச்சமும் இன்றி உன்னத சேவையில் ஈடுபட்டு வரும் பனை காக்கும் குழுவினரின் செயல்பாட்டை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என அப்பகுதி மக்கள் இந்த குழுவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி