ஆப்நகரம்

திருப்பூரில் நைஜீரியர்கள் கைது.. பின்னணி என்ன?

திருப்பூரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 25 Sep 2022, 11:06 am
திருப்பூரில் பனியன் வர்த்தகம் தொடர்பாக மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான நைஜீரியாவில் இருந்து வந்து தங்கியிருந்து தங்களின் நாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைத்து வருகிறார்கள். இவ்வாறு வரும் நைஜீரியர்கள்(nigeria) தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியிருப்பது அதிகரித்து வருகிறது.
Samayam Tamil Tirupur news today


விசா(Visa) காலம் முடிந்தும் இதுபோல் தங்கியுள்ள நைஜீரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கொங்குநகர் காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் ராயபுரம் பகுதியில் தங்கியிருந்த நைஜீரியர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போது சின்னான் நகர் பகுதியில் குடியிருந்த 3 பேரிடம் ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் ஒருவர் தனக்குரிய ஆவணங்களை கொண்டு வந்து காவல் நிலையத்தில் கொடுத்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்ற 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. விசா வழங்கப்பட்ட காலத்தையும் தாண்டி அவர்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து நைஜீரியாவின் டேம்சூ பகுதியை சேர்ந்த பிரவுன்வூ (46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சின்னான் நகர் பகுதியில் தங்கியிருந்து ஆடைகளை மொத்தமாக வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் செய்து வந்தனர். இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி