ஆப்நகரம்

பேருந்து பயண காதல்... வில்லனாக இருக்கும் சாதி.. காவல்துறையை நம்பி நிற்கும் இளம் தம்பதி

ராணிப்பேட்டையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதி பாதுகாப்பு வேண்டி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 24 Nov 2022, 4:12 pm
பேருந்து பயணத்தில் காதல் செய்து திருமணம் முடித்த காதல் ஜோடிகள் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்
Samayam Tamil vellore


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர். இவர்‌ தனியார் வெல்டிங் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அரக்கோணம் அடுத்த தணிக்கை போளூர் பகுதியை சேர்ந்தவர் சாருமதி. இவர் அதே ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு இருவரும் பேருந்தில் பயணம் செய்யும்போது அறிமுகமாகி ஒரு வருட காலமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக இருவரும் கடந்த 20-11-2022 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து இருவரது வீட்டாரின் அச்சுறுத்தல் காரணமாக கலப்பு திருமணம் செய்த காதல் தம்பதிகளான சந்திரசேகர் மற்றும் சாருமதி ஆகிய இருவரும் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.

சினிமா பாணியில் பேருந்து பயணத்தின்போது அறிமுகம் ஏற்பட்டு அதனால் உண்டான காதலால் திருமணம் செய்துகொண்டு பெற்றோருக்கு பயந்து போலீசில் தஞ்சம் அடைந்துள்ளனர். சாதி எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இவர்கள் சேர்ந்து வாழ வேண்டி கடைசியாக காவல்துறையை நாடியுள்ளனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து ஓருவரது வாழ்க்கைக்கும், உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி அவர்களை வாழவிட வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி