ஆப்நகரம்

வேலூரில் தானாக நிமிர்ந்து நின்ற அதிசய மரம்... ஏராளமான பெண்கள் வழிபாடு..!

வேலூரில் வேரோடு சாய்ந்த மரம் தானாகவே நிமிர்ந்து நின்றதாக கூறி பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 25 Mar 2023, 1:24 pm
மக்களில் பலர் அதீத தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். நம்ம ஊரை பொறுத்தவரை அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் மறைமுக பிணைப்பு இருந்துதான் வருகிறது. அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான் ஆன்மிகம் என்று சொல்லும் தீவிர ஆன்மிக வாதிகளும் இருக்கின்றனர்.
Samayam Tamil vellore


பல இடங்களில் தெய்வ நம்பிக்கை மரத்தில் இருந்தே பெருகுகிறது. பேசுபொருளாகிறது. வழிபாட்டு தலமாகவும் மாறுகிறது. அந்த வகையில், வேரோடு சாய்ந்து விழுந்த மரம் அதுவாகவே நிமிர்ந்து நின்றதாக நம்பி பொதுமக்கள் வழிபட்டு வருவது வேலூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்து வந்தது. அப்பகுதியில் கம்பீரமாக காட்சியளித்த அந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது.

இந்நிலையில், ஊர் மக்களோ அல்லது பணியாளர்களோ அந்த மரத்தை அப்புறப்படுத்தாமல் இருந்த நிலையில் சரிந்து விழுந்த அந்த மரம் தானாக நிமிர்ந்து நின்றதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும், அந்த மரத்துக்கு தெய்வ சக்தி இருப்பதாக நம்பி வேப்பங்கநேரி பகுதி இந்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், காலை, இரவு நேரங்களில் வழிபட்டு மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பக்தி பரவசத்துடன் மக்கள் கும்பிட்டு வருகின்றனர். இந்த விஷயம் காட்டு தீயைப்போல பரவியதால் சுற்று பகுதியில் உள்ள கிராம மக்களும் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் அங்குஇரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. பகல் நேரங்களில் அப்பகுதியில் வந்து செல்பவர்கள் சில நொடிகள் மரத்துக்கு அருகே நின்று பய பக்தியுடன் பார்வையிட்டு செல்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் அவரவர் குறைகளை சொல்லி வேண்டியும் நேர்த்தி கடனையும், செலுத்திவிட்டு செல்கின்றனர் .

இதனால் வேப்பங்கநேரி மரத்துக்கும், அப்பகுதிக்கும் மவுசு கூடியுள்ளது. இதுவரை கிராம நிர்வாகம் அதுகுறித்த எந்த விளக்கத்தையும் கூறியதாக தெரியவில்லை. அதிசய மரத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி