ஆப்நகரம்

தேர்தலில் போலி சாதி சான்று?; தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவருக்கு சிக்கல்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போலி ஜாதிச்சான்று கொடுத்த புகாரில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சுரேஷின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Apr 2022, 4:27 pm
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 247 கிராம ஊராட்சி தலைவர், 2,079 ஊராட்சி வார்டு கவுன்சிலர், 138 ஊராட்சி கவுன்சிலர்கள், 60 மாநகராட்சி கவுன்சிலர்கள் என மொத்தமாக 2,538 பதவிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் 6 மற்றும் 9, கடந்த பிப்ரவரி 19 என 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil vellore fake community certificate
தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சுரேஷ்


இதில், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கல்பனா சுரேஷ் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிட்டார்.

தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவரை தோற்கடித்து 609 வாக்குகள் பெற்று கல்பனா வெற்றி பெற்றார். வேட்புமனுவில் தன்னை ஆதிதிராவிடர் என்று கூறி அதற்கான சாதி சான்றிதழ் ஒன்றை சமர்பித்துள்ளார்.

இந்நிலையில், கல்பனா சுரேஷ் மாற்று சமூகத்தை(நாயுடு) சேர்ந்தவர் என்றும் அவர் தேர்தலில் போலியான சாதி சான்று சமர்பித்துள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கியராஜ் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான ‘விழிக்கண் குழு’ தோளப்பள்ளி ஊராட்சிக்கு நேரில் சென்று கல்பனா மற்றும் அவரது உறவினர், ஊர் மக்கள், படித்த பள்ளி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தியது.

அதில் அவர், ஆதிதிராவிடர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், கல்பனாவுக்கு SC சாதி சான்று வழங்கப்பட்டது எப்படி? இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

இதனிடையே, ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சுரேஷின் போலி ஜாதி சான்று விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட அனைத்து ஆவணங்களும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அவரது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் போலி சாதி சான்று கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி