ஆப்நகரம்

Ration shop: தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்; குடும்ப அட்டைதாரர்கள் குமுறல்!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் நியாய விலைக் கடையில் தண்ணீர் கலந்த கலப்பட மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 May 2022, 9:34 am
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் என்று அழைக்கப்படும் கீழ்வைத்தியனான்குப்பம்(Kilvaithinankuppam) அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள நியாய விலைக் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
Samayam Tamil water mixed kerosene supply in ration shop near vellore
கோப்புப்படம்


அந்த வகையில், மே 28 சனிக்கிழமை அன்று பசுமாத்தூர் நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணையில் தண்ணீர் கலந்த கலப்பட மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது ரேஷன் கடை ஊழியர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


அதன் பின்னர், தண்ணீர் கலந்த மண்ணெண்ணையை அனுப்பிய தனியார் நிறுவனத்திடமிருந்து புதியதாக மண்ணெண்ணெய் வர வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுது. இருப்பினும், அரசின் நியாய விலைக் கடையில் தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது வேதனையளிப்பதாக குடும்ப அட்டைதாரர்கள் குமுறுகின்றனர்.

அடுத்த செய்தி