ஆப்நகரம்

அதிமுகவினரின் மனுக்கள் காரணமின்றி நிராகரிப்பா?... கள்ளக்குறிச்சியில் கலாட்டா!

தியாகதுருகம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சியினர் திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 24 Sep 2021, 11:06 pm
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
Samayam Tamil admk party nomination rejected without reason party men hold protest in villupuram district
அதிமுகவினரின் மனுக்கள் காரணமின்றி நிராகரிப்பா?... கள்ளக்குறிச்சியில் கலாட்டா!


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்
பதவியில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் வீடுகளில் போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முறையான விளக்கம் அளிக்காததை கண்டித்தும், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமையில் அதிமுகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அதிமுகவினர் வேட்புமனுவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் தியாகதுருகம்-உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் ஒன்றிய கழக செயலாளர் ஐயப்பா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி