ஆப்நகரம்

சி.வி.சண்முகம் கோட்டையில் ஓட்டை; சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் பேனர்!

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நடைபெறவுள்ள அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி சேகரின் மகள் திருமணத்திற்கு வருகைத்தரும் வி.கே.சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் பிரமாண்ட வரவேற்பு பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அஇஅதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2022, 6:39 pm
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகள் முகமது ஷெரீப் மற்றும் சேகர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து பேசியதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பகளில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இதில், முகமது ஷெரீப் என்பவர் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும், அது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பிடிக்காததால் தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒருதரப்பினர் பகிரங்க குற்றம்சாட்டினர்.

ஆனால், அது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு என்றும், கட்சித் தலைமை உத்தரவை மீறி யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுப்பது இயல்பு தான் என்று மிக சாதரணமாக இந்த புகார்களை கடந்துச் சென்றுவிட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
ஊழலை அம்பலப்படுத்திய 'சமயம் தமிழ்' - ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்!

இப்படி, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் இந்த பிரச்சனை நீர் பூத்த நெருப்பாய் இருந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் மகள் திருமணம் நாளை நடைபெறவுள்ளது. மயிலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் திருமணத்தில் சிறப்பு அழைப்பாளராக வி.கே.சசிகலா கலந்துக்கொள்கிறார்.

இதற்காக, திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, மயிலம் ஆகிய பகுதிகளில் பிரமாண்ட பேனர், கட்அவுட்கள் வைக்கப்படுள்ளன. அந்த பேனர்களில் திண்டிவனம் கே.சேகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர், முன்னாள் நகர செயலாளர், நகர வங்கி தலைவர் என்று அதிமுக கொடி வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளதோடு, சசிகலாவின் புகைப்படத்துடன் கூடிய பேனருடன் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் விழுப்புரம் அதிமுகவில் பெரும் சர்ச்சையானது. இதனால், அதிமுக மயிலம் ஒன்றிய செயலாளர் T.D.சேகரன் மயிலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிப்பதோடு அதனை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ராமதாஸிடம் ஆசி வாங்க வந்த பாம்பு குட்டி? - வைரலாகும் புகைப்படம்!

ஆனால், காவல்துறையினரோ, சசிகலா கட்சிக் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கான ஆணை ஏதேனும் காண்பித்தால் அகற்றுவதாக கூறியுள்ளனர். இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி