ஆப்நகரம்

பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைக்குக் காலில் முறிவு: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பதற்றம்!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான பிரசவத்தின் காரணமாகப் பிறந்த பெண் குழந்தையின் காலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு.

Samayam Tamil 28 Jul 2021, 9:03 pm
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சபரீஸ்வரி(32). இவர் கடந்த 22ஆம் தேதி பிரசவத்திற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குக் கட்டாய ஒப்புதல் பெற்று அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. அப்போது அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது சம்பந்தமாக மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு மருத்துவர்கள் இது இயல்பான ஒன்றுதான் இதைப் பெரிது படுத்தாதீர்கள் எனக் கூறியுள்ளனர். அதிர்ந்துபோன பெற்றோர் சம்பவம் குறித்து மருத்துவ அலுவலரிடம் புகார் கொடுத்தனர். இதற்காக விசிக மாவட்டச் செயலாளர் சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
பழங்குடியினர் கல்விக்காக 7 வருடம் நடத்திய போராட்டம்: 15 நாளில் புதிய ஆட்சியர் செய்து முடித்தார்!
அப்பொழுது மருத்துவ அலுவலர் இல்லாததால் ஒரு மணிநேரமாக அங்கேயே காத்திருந்தனர். அந்த நேரத்தில் கூடியிருந்தவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டிஎஸ்பி, கணேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின் மருத்துவமனைக்கு வந்த பிரசவம் பார்த்த மருத்துவர் சிந்துவிடம் விளக்கம் கேட்டனர்.

அப்போது மருத்துவர் சிந்து, “தாய் மற்றும் சேய் ஆகியோரை பத்திரமாக மீட்க முயன்றோம். பிரசவத்திற்குக் காலதாமதமானதால் குழந்தை புத்தி சுவாதீனம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அக்குழந்தையைக் காலை பிடித்து இழுத்து வெளியில் எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

இதனால் ஏற்படும் கால் முறிவு என்பது அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பையும் தற்போதும் ஏற்படுத்தாது. எதிர் காலங்களிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என விளக்கம் அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி