ஆப்நகரம்

கொத்து கொத்தாகச் சாகும் கால்நடைகள்: புது கொரோனாவா?

மரக்காணம் அருகே மர்ம நோய் காரணமாகக் கால்நடைகள் அதிகம் உயிரிழந்து வருகின்றன. இது தொடர்பாக கண்டுகொள்ளாத அரசு கால்நடை மருத்துவர்கள்.

Samayam Tamil 12 Mar 2021, 7:37 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வசிக்கும் விவசாய மக்கள் பெரிதும் கால்நடைகளை நம்பியே வாழ்கின்றனர்.
Samayam Tamil கொத்து கொத்தாகச் சாகும் கால்நடைகள்: புது கொரோனாவா?


கடந்த ஒரு வாரமாகக் கால்நடைகள் மர்ம நோயின் காரணமாக அதிகம் இறந்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 7 நாட்களில் மட்டும் 31 மாடுகள் மற்றும் 170 ஆடுகள் நோய்த் தொற்றின் காரணமாக இறந்துள்ளது.

உயிரிழந்த ஆடுகள் அனைத்தும் வயிறு வீக்கமடைந்து இறப்பதாகவும், மாடுகள் கால்கள் வீங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி இறப்பதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்களுக்கு மரக்காணம் கால்நடை மருத்துவமனை வெகு தொலைவில் உள்ளதால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்: மரக்காணம் கடற்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... கண்டுகொள்ளுமா அரசு?

அதேபோல் அருகில் உள்ள முருக்கேரி கால்நடை மருத்துவமனை அழைத்துச் சென்றால், உங்கள் பகுதிக்கு மரக்காணம் கால்நடை மருத்துவமனைதான் அங்குச் செல்லுங்கள் எனக் கூறி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தனியார் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்க்கின்றனர். தனியார் கால்நடை மருத்துவர்கள் ஒரு மாட்டிற்கு 300 முதல் 400 ரூபாய் வரை கேட்பதால் மக்கள் அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கள் பகுதிக்கு உடனே ஒரு கால்நடை மருத்துவ முகாம் அமைத்துத் தந்து, மீதம் உள்ள கால்நடைகளையாவது காப்பாற்றித் தருமாறு பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாயில்லா ஜீவன்கள் மர்ம நோயால் உயிர் இழக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி