ஆப்நகரம்

பழிக்கு பழி: சகோதரர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jun 2020, 9:34 pm
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மூன்று மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
Samayam Tamil சம்பவ இடத்தில் போலீசார்
சம்பவ இடத்தில் போலீசார்


இதற்கிடையில் அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இன்று காலை சக்திவேல், தர்மராஜ் ஆகிய சகோதரர்கள் இருவரும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் மண்வெட்டி மற்றும் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்து சரிந்து விழுந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை போலீசார் தங்கள் வாகனத்தில் வைத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

'அவங்கள விடாதீங்க, ரொம்ப கொடூரனுங்க'..! தஞ்சை பாலியல் கும்பலின் முதல் சாட்சி...

அதேசமயம், குற்றவாளிகள் அருகே உள்ள கண்மாயில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், இருசக்கர வாகனத்தில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த இருவரையும் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில், தர்மராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பழிக்கு பழி வாங்கும் நோக்கில் நடைபெற்ற இந்த கொலை முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி