ஆப்நகரம்

அலுவலகம் மூடப்பட்டதால் ஊழியர்களுக்கு கிடா விருந்து வைத்த நகராட்சி ஆணையர்

இராஜபாளையம் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சார்பில் ஊழியர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jul 2020, 7:56 pm
கொரோனா தொற்றால் இராஜபாளையம் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில், நகராட்சி ஆணையர் கிடா வெட்டி விருந்து வைத்தது எதற்காக என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Samayam Tamil கிடா விருந்து


விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இராஜபாளையம் நகராட்சியில் நில அளவு பிரிவில் பணிபுரியக்கூடிய இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

இந்த நிலையில் இராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கத்தில் இராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பகுதியில் இன்று நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள் தலைமையில் நகராட்சி இன்ஜினியர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் கிடா வெட்டி கறி விருந்து அளித்துள்ளார் நகராட்சி ஆணையர்.

இராஜபாளையம் நகராட்சியில் உள்ள அதிகாரிகள் பல வருடமாக இதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதால்தான் அதிகாரிகள் இப்படி அலட்சியப்போக்காக செயல்படுகின்றனர் எனவும், இது மனவேதனை அளிக்கும் செயலாக உள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், “அதிகாரிகள் நகர் பகுதியில் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுக்கு செல்வதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் மொத்தமாக கலந்துகொண்டு கும்மாளம் அடிப்பது உயர் அதிகாரிகள் கவனத்துக்கு செல்லாதா? மாவட்ட ஆட்சியர் உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி