ஆப்நகரம்

ஊரடங்கில் மது விற்பனை செய்த பார் உரிமையாளர் கைது!

விருதுநகர் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுளனர்.

Samayam Tamil 13 May 2020, 10:31 pm
விருதுநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பார் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil ஊரடங்கில் மது விற்றவர்கள் கைது


இந்தியா முழுவதும் கொரோனா கொள்ளை நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுபான கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்து இரண்டு நாட்களுக்கு மட்டும் மது விற்பனை நடைபெற்றது. எனினும், பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தடையை மீறி பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. விருதுநகர் புல்லாக்கோட்டை சாலையில் செயல்படும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடையில் உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட மேற்கு காவல் நிலைய அதிகாரிகள், மதுபான விற்பனையில் ஈடுபட்ட திருமலை மற்றும் பிரபு ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டாஸ்மாக் கடை அருகில் செயல்பட்டு வரும் பாரில் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 565 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார் உரிமையாளர் காமாட்சி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி