இயற்கை முறை முடி வளர்ச்சி
இன்று சந்தைகளில் கிடைக்கும் எண்ணெய்கள், மருந்துகள், களிம்புகள் போன்றவை நம் தலைமுடியின் தரத்தை மேம்படுத்துவதாகவும், முடி வளர உதவுவதாகவும் கூறி விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அதில் அளவுக்கதிகமான வேதிப் பொருட்கள் தான் நிறைந்துள்ளன. அவை என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூட தெரியாது நாம் அதனைப் போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படி கெமிக்கல் கேர் தயாரிப்புகளில் மாட்டிக் கொள்ளாமல், இயற்கை முறையில் அதுவும் நமது சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தலைமுடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அலோவேரா ஜூஸ்
அலோ வேரா அல்லது சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் இந்த மூலிகையில் அதிக அளவு புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளது அறியப்பட்டுள்ளது. இது நமது உடலின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், சேதமடையும் தலைமுடியின் மயிர்க்கால்களை சரிசெய்யவும் உதவும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு தினமும் உங்களின் காலை நேரத்தை கற்றாழை ஜூஸ் கொண்டு துவங்க வேண்டும். வெறும் கற்றாழை சோற்றை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் அடித்து அப்படியே குடிக்கவும்.
பாதாம் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி
பாதாம் பருப்பில் புரதச் சத்து, வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஊட்டச்சத்துகள் ஆகும். பாதாம் பருப்பில் காணப்படும் வைட்டமின் ஈ கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால், சேதமடைந்த முடி விரைவில் சரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் வாழைப்பழகளில் நம் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான கால்சியம் மற்றும் போலிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. சில பாதம் பருப்புடன் இலவங்கப்பட்டை, தேன் மற்றும் இரண்டு முழு வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இந்த ஸ்மூத்தி உங்களின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவுகள்
நம் தலைமுடி 95% கெரட்டின் மற்றும் 18 அமினோ அமிலங்களால் ஆனது. தலைமுடியை பராமரிக்க புரதச் சத்து மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் உணவில் புரதச் சத்தை சேர்ப்பது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். முட்டை, கோழி, பால், சீஸ், கொட்டைகள், யோகர்ட் போன்றவை புரதச் சத்துகளின் சிறந்த மூலங்களாக விளங்குகிறது. இது போன்ற உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
பார்லி நீர்
பார்லியில் உள்ள இரும்புச் சத்து மற்றும் செம்பு, இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைத் தூண்டும். அதுமட்டுமின்றி பார்லி நீர் மயிர்க்கால்களை வலிமையாக்கும். முடி வளர்ச்சிக்கு பார்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் உப்பு சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும். பின் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து அருந்தவும்.
வெந்தயம்
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயத்தில் போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகளும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. அதுமட்டுமின்றி வெந்தயத்தில் புரதச் சத்தும் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு, முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஒரு டீஸ்பூன் வெந்தயதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அதனை அப்படியே சாப்பிடலாம். அது போல் உங்கள் சமையல் ரெசிபிகளிலும் வெந்தயத்தை சேர்த்து உண்ணலாம்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க இது போன்ற இயற்கை வீட்டு வைத்திய முறைகளையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். வேதிப்பொருட்கள் நிறைந்த ஹேர் கேர் தயாரிப்புகளை பயன்படுத்துவதை குறைத்து, இயற்கை முறையில் முடி வளர்ச்சியினைப் பெறுங்கள். இது போன்ற இயற்கை வழி முறைகள் உங்களின் முடி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.