அழகுக்கு அழகு சேர்க்கும் மோர்
பாலில் இருந்து பிரித்து எடுக்கக்கூடிய தயிர், மோர், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பால் சார்ந்த பொருட்கள் நம் உடலின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தலைமுடி, சருமப் பிரச்சனைகள் மற்றும் முதுமையை தாமதப்படுத்த என அனைத்துக்கு சிறந்த மருந்தாக பால் பொருட்கள் விளங்கிறது. பெண்கள் பலரும் நீண்ட மற்றும் பளபளப்பான முடியைப் பெற வேண்டும் என்று தான் விரும்புவர். முடிக்கு எவ்வாறு மோரைப் பயன்படுத்துவது என்று இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கு உதவும் மோர்
மோரில் லாக்டிக் அமிலம் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் உச்சந்தலையில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது. அதோடு, முடியின் மயிர்க்கால்கள் சுவாசிக்கவும் இது உதவுகிறது. அதுமட்டுமின்றி, நாம் தடவும் எண்ணெய் மற்றும் ஹேர் பேக் போன்றவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
பயன்படுத்துவது எப்படி
பொதுவாக கீழே நாம் கூறும் செய்முறை மிகவும் பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது. அதாவது மோரை நீங்கள் தினமும் குடிக்கலாம். இதனை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் தினமும் மோர் சாப்பிட விரும்பவில்லை எனில், கீழே நாம் கூறும் எளிய செய்முறையை முயற்சி செய்து பாருங்கள்.
தேவைப்படும் பொருட்கள்
மோர்
கறிவேப்பிலை
ரோஸ் வாட்டர்
எப்படி தயாரிப்பது
ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி புளித்த மோரை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு, ஐந்து அல்லது ஆறு கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் அடிப்பது போல் அடித்துக் கொள்ளவும். அந்தக் கலவை வடிகட்டி, அதில் மேலும் இரண்டு தேக்கரண்டி மோர் சேர்க்கவும். இறுதியாக அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் உங்களின் தலைமுடியை சிறிய பகுதிகளாக பிரித்து இந்தக் கலவையை உங்களின் உச்சந்தலையில் தடவி, 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து முடியை அப்படியே கட்டி விடுங்கள். பின்னர் 40 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
மோர் ஒரு சிறந்த க்ளென்சராக இருப்பதால், மாசு, இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி உங்கள் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள கறிவேப்பிலையில் வைட்டமின் பி 6, புரதம் மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் முடி உதிர்தல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இறந்த முடியின் வேர்க்கால்களை அகற்றும் போது உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது.
தினமும் ஒரு கைப்பிடி பச்சை கொத்தமல்லி சாப்பிடுங்க... இந்த பிரச்சினைலாம் சரியாயிடும்...
யார் பயன்படுத்தக்கூடாது
நீங்கள் சளி அல்லது காய்ச்சலால் எளிதில் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நீங்கள் உங்களின் உச்சந்தலையில் மோரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோல், குளிர்காலம் அல்லது மழைக்காலத்தின் போது இந்த பேக்கை பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பாக ஆஸ்துமா, வீசிங் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் இந்த சீசனில் மோரைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வெயில் காலங்களில் இதை எல்லோரும் பின்பற்றலாம். நல்ல பலனைப் பெற முடியும்.
லெமன் வாட்டர் குடித்து 32 கிலோ குறைந்த பெண்... அவரோட அனுபவத்தை தெரிஞ்சிக்கங்க...
சருமத்திற்கு உதவும் மோர்
சரும பிரச்சனைகளைப் போக்க மோர் சிறந்தது. மேலும், மோர் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. உங்களுக்கு சன் டேன் இருந்தால் அந்த இடத்தில் மோர் தடவி மசாஜ் செய்வதன் மூலம் விரைவில் குணமடையச் செய்யலாம். அதேபோல் தழும்புகளைக் குறைக்க மோர் மற்றும் ஆரஞ்சு தோலின் பொடியைப் பயன்படுத்தி அந்தப் பேக்கை பயன்படுத்தலாம்.
மோரை சருமத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு, கரும்புள்ளிகள், கறைகள் மற்றும் சரும நிறமாற்றத்தை குறைக்க உதவுகிறது. இது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. இதனால் உங்களின் சருமம் ஒளிரும். இதில் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்லது.