ஆப்நகரம்

முடிக்கு ஊட்டமளித்து கருப்பு நிறத்தையும் பாதுகாக்கும், நல்லெண்ணெய் மருதாணி! நிபுணர் குறிப்பு!

மருதாணி. முடிக்கு இயற்கை சாயம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மருதாணி தான். அதே போன்று கூந்தலுக்கு நன்மை அளிக்க பயன்படுத்த வேண்டிய எண்ணெய் என்றால் நல்லெண்ணெய் என்பதே நினைவுக்கு வரலாம். இவை இரண்டும் கொண்டு தயாரிக்கப்படும் மருதாணி எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவும் என்கிறது ஆயுர்வேதம். இந்த எண்ணெய் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 19 Jan 2023, 1:28 pm
தலைமுடி பிரச்சனைக்கு மருதாணி என்பது பழங்கால தீர்வு. இது அனைத்து இயற்கை நன்மைகளையும் உள்ளடக்கிய மூலிகை என்று சொல்லலாம். மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் முடிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கூந்தல் நிறம் தக்கவைக்கலாம். அதோடு முடி சிறந்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்யலாம். முடியின் வகையை பொறுத்தும் பல்வேறு முடி பிரச்சனைகளுக்கும் மருதாணி பயன்படுத்தப்படுகிறது.
Samayam Tamil use these sesame oil and henna for hair regrowth according to ayurveda expert tara jayasri
முடிக்கு ஊட்டமளித்து கருப்பு நிறத்தையும் பாதுகாக்கும், நல்லெண்ணெய் மருதாணி! நிபுணர் குறிப்பு!

மேலும் கூந்தலுக்கு நன்மை தரும் நல்லெண்ணெய் உடன் மருதாணி சேர்த்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் முடி பிரச்சனைக்கு தீர்வளிக்கும் மருதாணி நல்லெண்ணெய் எப்படி தயாரிப்பது என்ற குறிப்பை அளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாரா ஜெயஸ்ரீ MD (Ayu) .


முடி வளர்ச்சிக்கு நல்லெண்ணெய் மருதாணி எண்ணெய்

தேவை
மருதாணி பொடி - 1 கப் அளவு
நல்லெண்ணெய் - அரை லிட்டர் அளவு

செய்முறை
மருதாணி பொடி சுத்தமானதாக இருக்க வேண்டும். வீட்டிலேயே தயாரிப்பதும் எளிமையானது. மருதாணி இலைகளை காம்பு நீக்கி இலைகளை மட்டும் தனியாக எடுத்து வெயில் படாமல் உலர்த்தி கொள்ளவும். பிறகு மருதாணியை மிக்ஸியில் பொடித்து மெல்லிய துணியில் சலித்து கொள்ளவும்.
மூன்று மாதங்கள் வரை இந்த பொடியை வைத்து பயன்படுத்தலாம்.
முதலில் அடிகனமான வாணலி ஒன்றில் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் விட்டு சூடேற்றவும். எண்ணெய் கொதிக்கும் வரை வைத்திருந்து பிறகு மருதாணி பொடியை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அடுப்பை அணைத்து பிறகு கலவையை குளிர்விக்கவும். இதை இரண்டு நாட்கள் வைத்து பிறகு வடிகட்டி பாட்டிலில் சேமிக்கலாம். வடிகட்டாமலும் பாட்டிலில் சேமித்து பயன்படுத்தலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த எண்ணெயை தயாரித்து பயன்படுத்துங்கள்.

மருதாணி எண்ணெய் எப்படி பயன்படுத்துவது?

இதை தினமும் பயன்படுத்த விரும்பினால் சில துளி எண்ணெயை விரலில் தொட்டு உச்சந்தலை முழுவதும் படரும் படி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.
தலைகுளியலுக்கு முன்பு மசாஜ் போன்றும் இதை பயன்படுத்தலாம். இளநரை இருந்தால் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் முதலில் ஆரஞ்சு நிறமாக மாறி பிறகு படிப்படியாக பிரவுன் நிறத்தை கொண்டு வரும். உள்ளுக்கு எடுக்கும் ஊட்டமும் பராமரிப்பும் சீராக இருந்தால் முடி கருமையாக மாறும்.
இந்த எண்ணெயை அனைவரும் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு தனி வாசத்தையும் அளிக்க கூடும்.

மருதாணி பாதுகாப்பானதா? பக்கவிளைவுகளை உண்டு செய்யுமா?

மருதாணி சிறந்த இயற்கை மாற்று. இது மோசமான இராசயனங்களை தவிர்க்கவும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும் செய்கிறது. இவை தாவர அடிப்படையிலான ஒன்று என்பதால் எரிச்சல் இல்லாமல் இருக்கும்.
மருதாணி பாதுகாப்பானது எனினும் ஒவ்வாமை உணர்திறன் அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துவது மருதாணி கூந்தலை வறட்சிக்கு ஆளாக்கலாம் என்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ?

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் எண்ணெயில் மிக முக்கியமானது நல்லெண்ணெய். இது பல ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது. இது சமையலை போன்று கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது.
90% ஆயுர்வேத சிகிச்சைகள் நல்லெண்ணெயை அடிப்படையாக கொண்டவையே. இதன் ஊட்டச்சத்தும், அமைதியான மற்றும் வெப்பமடையும் தன்மையும் இதை சிறந்த மசாஜ் எண்ணெயாக மாற்றுகிறது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் இது தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்த பரிந்துரைக்கிறது.
இது முடி வளர்ச்சியை உறுதி செய்கிறது. உச்சந்தலை நுண்ணறைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் அசுத்தங்கள் இல்லாமல் செய்கிறது. இதனால் ஒட்டுமொத்த முடி பிரச்சனையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்