நம்முடைய உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை நாம் நம்முடைய உணவுகளில் இருந்து தான் பெறுகிறோம். உணவிலிருந்து கிடைக்கப்பெறாத சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் போன்றவற்றை பெறுவதற்கு தான் சப்ளிமெண்ட் போன்றவற்றை எடுக்கிறோம. நாம் உண்ணும் சத்தான உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்குச் சென்று சேராமலே கழிவுகளாக வெளியேறினால் எந்த பயனும் கிடைக்காது. அப்படி ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் நம்முடைய உடல் முறையாக உறிஞ்ச என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லவ்னீத் பத்ரா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்று பார்ப்போம்.
ஆலிவ் ஆயில் - ஸ்பின்னாச்
கீரைகளில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பது நமக்குத் தெரியும். அதோடு ஏராளமான வைட்டமின்களும் மினரல்களும் இதில் நிறைந்திருக்கின்றன.
கீரைகளை வதக்கி சாப்பிடும்போது அதனுடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் கீரைகளில் உள்ள போட்டோகெமிக்கல்களை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
பாதாமும் ஆரஞ்சு பழமும்
பாதாமில் புரதச்சத்துடன் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. அதேபோல ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
நம்முடைய தினசரி ஊட்டச்சத்து தேவையிலும் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதிலும் இந்த இரண்டு வைட்டமின்களுக்கும் மிக முக்கியப் பங்குண்டு. பாதாம் மற்றும் ஆரஞ்சு இரண்டிலுமே ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம். இவை சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.
வைட்டமின் சி-யை போலவே வைட்டமின் ஈயும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் இவையிரண்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவற்றின் முழு பயனையும் நீங்கள் பெறுவீர்கள்.