உணவு உண்ணும் முறை சரியானதாக இருந்தால் உடலில் எல்லா விஷயங்களும் சீராக நடைபெறும். உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்பும் செய்ய வேண்டிய விஷயங்கள் உண்டு.
ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இயற்கை மருத்துவ நிபுணர் சக்தி விஜயன் சொல்வதை கேட்கலாம்.
சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துகொள்ளும் உணவு செரிமானம் ஆக வேண்டும். உணவில் இருக்கும் சத்துகள் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பு செய்ய கூடிய விஷயங்கள் உண்டு.
ஊட்டச்சத்து நிபுணர் தரும் பாரம்பரியமான ஹெல்தி ஸ்நாக்ஸ் ஐடியாக்கள்! ஆரோக்கியம் அதிகரிக்கும்!
சாப்பிட தெரியாதா என்று கேட்கலாம். ஆனால் சாப்பிடும் போது சில தவறுகளை செய்கிறோம். சாப்பிடும் போது முதலில் பசி உணர்வு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சிலர் பசி வந்தால் தலைச்சுற்றல் நடுக்கம் வயிற்றில் ஒரு சத்தம் வருவது எல்லாமே பசி உணர்வு கிடையாது. பசி உணர்வு என்பது இயற்கையாக வரவேண்டும். என்ன உணவு என்பதில் ஆவல் இருக்க வேண்டும்.
சிலருக்கு ஓய்வாக இருக்கும் போது சிப்ஸ் சாப்பிட வேண்டும், இனிப்பு சாப்பிட வேண்டும் என்றூ தோன்றும். இது பசியால் வருவதல்ல, நாக்குக்கு சுவை வேண்டி வருவது. இயற்கையாக உணவின் மீது ஆர்வம் வந்த பிறகு மனம் விரும்பும் போது சாப்பிட்டால் செரிமானம் மேம்படும்.
சிலர் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் பசி பசி என்று சொல்வார்கள். ஏற்கனவே வெயிலால் அலைந்து மந்தமாக வந்தபோது உடல் உயிராற்றல் இழந்து இருக்கும். அப்போது உடனடியாக சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் உட்கார்ந்து 10 முறையாவது மூச்சை ஆழமாக இழுத்து ஆசுவாசப்படுத்திகொண்ட பிறகு உணவை எடுக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு குளிர்ந்த நீரால் முகம், காதுகள், பின்னங்கழுத்து, கைகள், முட்டி வரை கழுவி விடுங்கள். இதனால் குளிர்ந்த நீர் பட்ட பகுதிகள் மாற்றம் அடையும். வெளியிலிருந்து வந்த உடன் இதை செய்யலாம். ஆசுவாசப்படுத்திகொள்ளலாம். சில நிமிடங்கள் படுத்து கொள்ளலாம். இதையெல்லாம் செய்தால் மனம் ஒருநிலைப்படுத்தப்படும்.
உணவு சாப்பிடும் இடமும் முக்கியத்துவமானது. இந்த நேரத்தில் மனநிலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் சத்தம் போடுவது,செல்ஃபோன் பார்ப்பது வாட்ஸ் அப் பார்ப்பது, பேசுவது, டீவி பார்ப்பது, பாடல் கேட்பது போன்ற எதையும் செய்யகூடாது. ஏனெனில் இவை எல்லாமே மனதில் ஒவ்வொரு சத்தத்துக்கேற்ப மாற்றங்களை உண்டாக்கும். மனம் அமைதியாக கண்கள் உணவை பார்க்க, வாசனை நுகர, கைகள் உணவை தொடும் போது உணர்வு வர வேண்டும். இப்படி உடலில் உள்ள புலன்கள் அனைத்தும் உணவோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் உடல் எடை குறைக்க செய்ய வேண்டியது என்ன?
உணவு அதிக சூடாகவோ அதிக குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது. வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். அதிக சூடாக இருந்தால் அது மூலநோய்க்கு காரணமாக அமைந்துவிடலாம். சூடாக வாயில் வைக்கும் உணவு, திரவம் எதுவாக இருந்தாலும் அது ஆசனவாயை பாதிக்கும். குளிர்ச்சியாக இருக்கும் போது செரிமானத்தை பாதிக்கும்.
உணவில் மொத்தம் ஆறுசுவை உணவுகள் சொல்லப்படுகிறது. ஆறுசுவைகள் அதாவது சுவை அற்று போக வேண்டும் என்று சொல்வார்கள். உண்ணும் உணவு சரியான முறையில் உடலுக்கு செல்ல உதவுவது உமிழ் நீர் தான் இது உயிர் நீர் என்றழைக்கப்படுகிறது. உணவில் கலந்து மென்று சாப்பிட்டால் தான் கூழ் பதத்துக்கு மாறி உள்ளே சென்றால் அது செரிமானம் எளிதாக உதவக்கூடும்.
உணவு உண்ணும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். உணவை உமிழ்நீரோடு கலந்து உண்ணும் போது வாயை மூடியபடி சாப்பிட வேண்டும். அதனால் தான் சாப்பிடும் போது பேச கூடாது என்று சொல்வார்கள். உணவு கூழாக செல்லும் போது உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
உணவு உண்ணும் போது டைனிங் டேபிளில், அல்லது நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடும் போது கால்களை கீழே தொங்க விடுவதுண்டு. ஆனால் இதனால் ஜீரண உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்படும். கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். சாப்பிடும் போது சம்மணம் போட்டு குனிந்து கைகளால் உணவை வாயில் வைத்து மென்று சாப்பிடும் போது அந்த உணவு உடலுக்கு ஆற்றலை தருகிறது. உணவில் இருக்கும் சத்து உறிஞ்சப்படுகிறது. உணவை வழிபாடாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் நல்லது என்கிறார் இயற்கை மருத்துவ நிபுணர் சக்தி விஜயன்.