மனித உடலில் நீரேற்றம்
மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. அதனால் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் போதுமான அளவு நீர் மற்றும் நீர் பானங்கள் குடிப்பது நன்மை அளிக்கும்.
உடலுக்கு தினசரி அளவில் 3 லிட்டர் தண்ணீராவது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு தேநீர், காஃபி, பால், பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகள் அனைத்தும் கணக்கிடப்படுகின்றன.
உண்ணும் உணவில் இருந்து குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தும் உடல் நீர்ச்சத்தை பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் நீர்ச்சத்து அவசியம் என்றாலும் அவர்கள் போதுமான அளவு நீர்ச்சத்தை எப்படி பெறுகிறார்கள் என்பதும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நீர்ச்சத்து
சர்க்கரை நோயாளிகளும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். தினசரி தாகம் இல்லையென்றாலும் போதுமான அளவு நீரேற்றத்துடன் இருப்பது நல்லது. ஆனால் பானங்கள் என்று வரும் போது சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக பழச்சாறுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் என்று வரும் போது நீர்ச்சத்து தானே என்று அதை கவனிக்காமல் இருந்தால் நீங்கள் நினைத்ததை விட அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரையை கொண்டிருக்கலாம். அதனால் பானங்களில் கவனம் அவசியம். சர்க்கரை நோயாளிகள் உடலை எப்படி நீரேற்றமாக வைத்திருப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் நீரேற்றத்துக்கு தண்ணீர்
தண்ணீர் முதன்மையானது. தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு வேண்டிய நீரேற்றம் பெற முடியும். அதிகமாக தண்ணீர் குடிக்க முடியவில்லை என்பவர்கள் தண்ணீரில் எலுமிச்சை அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை பிழிந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கும் நீரேற்றம் குறையாமல் இருக்க இந்த தண்ணீர் குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் காஃபி பானங்கள்
காஃபி, தேநீர் இரண்டுமே ஆரோக்கியமானது ஆனால் அளவாக இருந்தால் நாளொன்றுக்கு இரண்டு கப் காஃபி அல்லது தேநீர் எடுக்க வேண்டும். அதே நேரம் சாக்லேட் காஃபி, க்ரீம் காஃபி போன்றவற்றை எப்போதும் எடுக்க கூடாது. பால் கலந்த தேநீர் , காஃபி என்றால் குறைந்த கொழுப்புள்ள பால் எடுக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் மூலிகை தேநீர்
சர்க்கரை நோயாளிகளின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியூட்டும் பானங்களாக மூலிகை தேநீர் கலவைகள் உள்ளது. இவை காஃபின் இல்லாதவை. தினம் ஒரு மூலிகை தேநீர் எடுப்பதன் மூலம் நீரிழிவு பாதிப்புகளையும் குறைக்கலாம். இலவங்கபபட்டை தேநீர், தனியா தேநீர், வெந்தய தேநீர், புதினா தேநீர், க்ரீன் டீ என தினம் ஒன்றாக சேர்த்து வருவது நீரேற்றத்தையும் மேம்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகள்
சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகள் பருகலாமா என்பது குறித்து குழப்பம் உண்டு. பழச்சாறுகள் சர்க்கரை சேர்க்காதவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 150 மில்லி அளவு வரை எடுக்கலாம். இது ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும். நீங்கள் அதிகமாக பழச்சாறு எடுத்தால் அது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் அளவுக்கு மீறி எடுக்க வேண்டாம்.
சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
பால் சிறந்த பானங்களில் ஒன்று. இது நீரேற்றம் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலம். கொழுப்பு நீக்கப்பட்ட பால் தினசரி ஒரு கப் அளவில் எடுத்துவரலாம். பாலுடன் சிட்டிகை மஞ்சள், சிட்டிகை மிளகுத்தூள் கலந்து எடுத்துவருவதன் மூலம் உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நீரிழிவு குறையும் போது ஆற்றல் பானங்கள் உதவும். என்றாலும் மருத்துவரின் அறிவுரையோடு எடுக்க வேண்டும். ஆற்றல் பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம்.