ஆப்நகரம்

குளு-குளு ஏசி, நேரடி ஒளிபரப்புடன் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வுக்காக ஏசி வசதியும், சுமார் 20 இடங்களில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

TNN 29 Apr 2017, 5:46 pm
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வுக்காக ஏசி வசதியும், சுமார் 20 இடங்களில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil ac facility live telecast in 20 places for meenakshi amman sokkar marriage
குளு-குளு ஏசி, நேரடி ஒளிபரப்புடன் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம்


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க, மதுரை குலுங்க கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

கொடி ஏற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து, நேற்று முதல் மே மாதம் 9-ம் தேதி வரை தினசரி காலை, மாலை நேரங்களில் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். சுவாமிகள் உலா வரும்போது சுவாமிகளுக்கு முன்பு பஞ்சமூர்த்திகள் பூச்சர குடைகள் தீவட்டிகள், யானை, குதிரை, ஒட்டகங்கள், மாடு, கோலாட்டம், நாதஸ்வர கலைஞர்கள், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு பரிவாரங்களுடன் உலா வரும் நிகழ்ச்சி நடக்கின்றது.

தொடர்ந்து, மே 5-ம் தேதி இரவு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதுடன், அம்மனுக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்படும். மே 6-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற மே 7-ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.

சித்திரையில் மீனாட்சி அம்மன் கோயிலும், மதுரையும் ஜொலித்தாலும், சித்திரை வெயிலும் ஜொலிக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அளவுக்கதிகமான வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மே 7-ம் தேதி நடக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மேடைக்கு அருகில் 300 டன், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் அளவில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், சித்திரை வீதிகளில் நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான குடிநீர் கிடைக்கவும், திருக்கல்யாணத்தை, 20 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஆறாயிரம் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கட்டணமில்லா தரிசனம் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படும். ரூ.500 கட்டண அனுமதியில் 2,250 பேர் மேற்கு கோபுரம் வழியாகவும், ரூ.200 கட்டண அனுமதியில் 3,250 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AC Facility, Live telecast in 20 places for Meenakshi Amman Sokkar Marriage

அடுத்த செய்தி

டிரெண்டிங்