ஆப்நகரம்

மகா சிவராத்திரி விரதம் 2023 : எந்த நாளில் கண் விழிப்பது? எப்படி விரதம் இருப்பது?

பெளர்ணமிக்கு பின்பு வரும் 14 வது நாள், அமாவாசைக்கு முன்பு வரும் 2 வது நாளை சிவராத்திரி நாள் என்கிறோம். சிவராத்திரி விரதமானது சதுர்தமி திதியில் கடைபிடிக்கப்படுவதாகும். மாசி மாத சதுர்தமி திதியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கிறோம். இந்த நாளில் கடைபிடிக்கப்படும் விரதமே மற்ற அனைத்து விரதங்களையும் விட மிக உன்னதமான விரதமாக கருதப்படுகிறது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 13 Feb 2023, 4:42 pm
மகா சிவராத்திரி நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை துதித்து, அவரை வழிபடுவதாக ஐதீகம். அதனால் அந்த சமயத்தில் நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சிவனின் அருளும், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் நமக்கு கிடைத்து, வேண்டிய வரங்கள் கிடைத்து, சகல சம்பத்துக்களும் நிறைந்த சிறப்பான வாழ்க்கை அமையும் என சொல்லப்படுகிறது.
Samayam Tamil maha shivratri vratham rules date and time
மகா சிவராத்திரி விரதம் 2023 : எந்த நாளில் கண் விழிப்பது? எப்படி விரதம் இருப்பது?


மகா சிவராத்திரி விரதம் 2023 :

சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மாக சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி வருவது. இதை மகா சிவராத்திரி என்கிறோம்.

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி வருகிறது. சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்த நாளில் வருகிறது. இதனால் மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் விரதத்தை துவக்க வேண்டும்? எந்த தேதியில் கண் விழிக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எந்த நாளில் கண் விழிக்க வேண்டும்? எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மகா சிவராத்திரியில் நடக்கும் நான்கு கால பூஜைகளின் சிறப்புக்கள்

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை :

*பிப்ரவரி 18 ம் தேதி அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.

* வீட்டில் இருக்கும் பூஜை அறையில் விளக்கேற்றி, சிவனுக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் ஆகியவற்றை கூறி வழிபட வேண்டும்.

* அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

* முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், இளநீர், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

விரதம் கடைபிடிக்கும் முறைகள் :

* பிப்ரவரி 18 ம் தேதி பகல் முழுவதும் தூங்கக் கூடாது.



* மாலை 6 துவங்கி, பிப்ரவரி 19 ம் தேதி காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே இந்த சமயத்தில் சிவ பூஜை செய்து வழிபடலாம்.

* பிப்ரவரி 19 ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நிறைவு செய்த பிறகு, பாரணை செய்து உணவு சாப்பிட்டு உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.

* பிப்ரவரி 19 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விளக்கேற்றி, சிவ நாமங்கள் சொல்லி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்.

மகா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவ பூஜையில் தாழம்பூ பயன்படுத்தும் நாள் பற்றி தெரியுமா?

எந்த நாளில் கண் விழிக்க வேண்டும்?

பிப்ரவரி 18 ம் தேதி காலையில் விரதம் துவங்கிய பிறகு பகல் முழுவதும் தூங்கக் கூடாது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். நான்கு காலங்களிலும் கண் விழிக்க முடியாதவர்கள் மூன்றாவது காலத்தின் போது கண்டிப்பாக கண் விழித்து, சிவனை வழிபட வேண்டும். பிப்ரவரி 19 ம் தேதி பகலில் சைவ உணவாக, வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று பகல் முழுவதும் தூங்கக் கூடாது. மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்றி வழிபட்ட பிறகே, தூங்க வேண்டும்.

மாசி மாதம் மகத்துவம் : முக்கிய விரத நாட்களும், அவற்றின் சிறப்புகளும்

என்ன மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்?

பிப்ரவரி 18 ம் தேதியன்று சிவ மந்திரங்கள், பதிகங்கள் என்னவெல்லாம் தெரிகிறதோ அவற்றை பாராயணம் செய்யலாம். எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக ஓம் நம சிவாய மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லலாம். இரவில் நான்கு கால பூஜையின் போது சிவ புராணம் படிக்கலாம். திருவாசகம் பாராயணம் செய்யலாம். திருவிளையாடல் புராணம் போன்ற சிவன் பற்றிய கதைகள், புராணங்கள் எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஓம் நம சிவாய மந்திரத்தை எழுதலாம்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்