ஆப்நகரம்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 - இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

திருவெம்பாவை பாடல்கள் என்பது பக்தி செய்து அருள் பெறுவதற்கு உரிய மார்கழி மாதத்தில் பாவை நோன்பு எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும், பக்தி செய்து, இறைவனை பாடி படிவதன் அவசியம் குறித்கும் சொல்லி அறியாமை, ஆசையிலும், உலக இன்பங்கள் என்னும் மாயையிலும் மயங்கி உறங்கிக் கிடக்கும் உலக மக்களையும் எழுப்புவதற்காக மாணிக்கவாசகர் பாடியதாகும். ஆனால் திருப்பள்ளியெழுச்சி என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் செய்வதற்காக இறைவனாகிய சிவபெருமானை துயில் எழுப்புவதற்காக பாடப்படும் பாடலாகும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 8 Jan 2024, 7:21 pm
திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடலில் இறைவனை போற்றியும், 2வது பாடலில் இறைவனின் முக அழகையும், 3வது பாடலில் இறைவனின் திருவடிகளையும் போற்றி பாடிய மாணிக்கவாசகர், 4வது பாடலில் இறைவனிடம் அருளை வேண்டும் போது எந்த வழிமுறையில் வேண்ட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்.
Samayam Tamil Lord Shiva


திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 :

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :

வீணையால் இனிமையான இசையின் இசைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கமும், யாழினை மீட்டு உன்னை போற்றி பாடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கமும், பலவிதமான வேதங்கள், மந்திரங்களை சொல்லி உன்னை தொழும் வேத விற்பன்னர்கள் ஒரு பக்கமும், புதிதாக மலர்ந்த வாசனை மலர்களை கைகளில் ஏந்தி உன்னை போற்றி பூஜித்துக் கொண்டிருக்கும் அடியார்கள் ஒரு பக்கமும் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் உன் மீது கொண்ட அளவு கடந்த பக்தியின் மிகுதியால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி உன்னுடைய அருளை பெறுவதற்காக காத்திருக்கும் அடியார்கள் ஒரு பக்கமும், தலைகளுக்கு மேல் கைகளை கூப்பி உன்னை பலவிதமான நாமங்களை சொல்லி அழைத்துக் கொண்டிருக்கும் அடியார்கள் கூட்டம் ஒரு பக்கமும் உள்ளது. திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! அவர்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை வணங்கவும், அவர்களுடன் சேர்த்து உன்னுடைய அடியவனாகிய என்னையும் ஆட்கொள்வதற்காகவும் பள்ளி எழுந்தருள வேண்டும்.

ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 25 -ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

விளக்கம்:

இறைவனிடம் வேண்டும் போது எப்போது நான், எனது, நான் செய்தேன் என்ற ஆணவ வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. நான் என்ற ஆணவத்தை விட்டு விட்டு, சென்றால் மட்டுமே இறைவனின் அருளுக்கு உரியவர்கள் ஆக முடியும். அதுவே உண்மையான பக்தியாகும். இறைவன் முன் சென்றதும் மனம், ஆத்மா என அனைத்தும் ஒடுங்க வேண்டும். தனக்கு மட்டுமே இறைவனின் அருள் கிடைத்து, தான் மட்டுமே நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்பதையே மாணிக்கவாசகர் இங்கு உணர்த்துகிறார். இறைவனுடைய அருளை உலகில் உள்ள அனைவரும் பெற்ற பிறகே கடைசியாக தான் பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மாணிக்கவாசகர் வேண்டுகிறார். காத்திருக்கும் அடியாளர்கள் அனைவரும் நலம் பெற்று, அவர்களுடன் சேர்த்து தன்னையும் ஆட்கொள்ள வேண்டும் என தனக்கு கிடைத்தது போலவே இறைவனின் அருள் அனைவருக்கும் பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்