ஆப்நகரம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசுக் காட்சி இன்று மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தரிசிக்க, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தார்கள்.

TOI Contributor 16 Aug 2016, 4:58 pm
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசுக் காட்சி இன்று மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தரிசிக்க, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தார்கள்.
Samayam Tamil sankaran kovil aadi thavasu festival
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!


சங்கரன்கோவில் திருத்தலத்தில், ஆடித் தபசுத் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையும் மாலையும் கோமதி அம்பாள் பல வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் வைபவம் நடைபெற்றது. கோயிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தபசுக் காட்சி இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக, இன்று காலையில் கருவறையில் உள்ள மூலவர்களான சுவாமிக்கும் அம்பாளுக்கும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

அதையடுத்து, திருக்கண் தபசு மண்டபத்தில் பானகம் முதலான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பட்டு, பரிவட்டம் அலங்காரத்திற்கு உரிய பொருட்கள் சகிதமாக ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பிறகு சர்வ அலங்காரத்தில் காட்சி தந்தாள் அன்னை!

இதையடுத்து, உச்சிகால பூஜையின் போது தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்கு வந்து தரிசனம் தந்தருளினார் அம்பாள்.

மூலஸ்தானம் சுவாமி, அம்பாள் மற்றும் சந்திர மெலீஸ்வரருக்கு கும்ப அபிஷேகத்தை தொடர்ந்து, மாலையில் கோயிலில் இருந்து சுவாமி புறப்பட்டு, தெற்கு ரதவீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசுப் பந்தலுக்கு வந்து எழுந்தருளினார்.

பின்னர், தபசு மண்டபத்தில் உள்ள அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி எதிர்ப் பந்தலுக்கு வந்தார் கோமதி அம்பாள். இதன் பிறகு, முக்கிய நிகழ்வான ஆடித்தபசு விழாவில்,மாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் தவசுக் காட்சி வைபவம் நடைபெற்றது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு திருக்காட்சி வழங்கும் வைபவம் பிரமாண்டமாக நடைபெறும்.
ஆடித்தபசு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி மற்றும் அம்பாளைத் தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்