ஆப்நகரம்

விறுவிறுப்பு காட்டிய மாட்டு வண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ விழாவில் அசத்தல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு, 80ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Samayam Tamil 24 Apr 2019, 5:44 pm
தமிழகத்தில் ரேக்ளா பந்தயத்திற்கு தனியிடம் பிடித்தது வைரிவயல் கிராமம். இங்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ வீரமுனியாண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சந்தன காப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதனையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெறும். நடப்பாண்டு நடைபெற்ற பந்தையத்தில் சென்னை, திருச்சி,தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர்.

அதாவது 40 ஜோடி மாடுகளும், 107 குதிரைகளும் பந்தயத்தில் கலந்து கொண்டன. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 27 ஜோடிகளும், பெரிய குதிரை பிரிவில் 30 குதிரைகளும், கரிச்சான் குதிரை பிரிவில் 77 குதிரைகளும் பந்தயத்தில் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.

வைரிவயல் கடைவீதியிலிருந்து வெட்டிவயல் வரை 12 கிலோ மீட்டர் தூரம் பந்தய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் அளித்து கெளரவிக்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து மாடுகள், குதிரைகளுக்கு குத்து விளக்கு, வேஷ்டி, துண்டுகள் விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்டன.

பந்தயத்தைக் காண ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து ரசித்தனர். காவல்துறை டிஎஸ்பி கோகிலா தலைமையில் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்