ஆப்நகரம்

மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு கர்நாடகாவில் தலைமறைவானவர் தற்கொலை!

மனைவியைக் கொன்று விட்டு கர்நாடகாவில் தலைமறைவான கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 1 Oct 2018, 1:12 pm
கன்னியாகுமரியில் மனைவியை அரிவாளால் வெட்டி கர்நாடகாவில் தலைமறைவான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil kaniyakumari husband attack


கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட்(40). இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி(33). எட்வர்ட் வழக்கறிஞராகவும், ஷைனி அரசுக் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகவும் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

எட்வர்ட்டுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த எட்வர்ட், அரிவாளால் ஷைனியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ஷைனியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து எட்வர்ட் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்த காவல்துறையினர், எட்வர்டை தேடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மண்டியா அருகிலுள்ள எலியூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது, உடலில் இருந்த சட்டைப் பையில் ஏதும் இருக்கிறதா என்று போலீசார் தேடினர். அதில் பார் கவுன்சில் அடையாள அட்டை ஒன்று இருந்தது. அதை வைத்து அவர் யார் என்று விசாரித்த போது, தற்கொலை செய்து கொண்டவர் எட்வர்ட் என்பது தெரியவந்தது. மனைவியை அரிவாளால் வெட்டியதால், போலீசுக்கு பயந்து அரிவாளால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி