ஆப்நகரம்

ஏழை மூதாட்டியின் குடிசைக்கு சென்று விருந்தளித்த மாவட்ட ஆட்சியர்!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த மூதாட்டிக்கு, வீடு தேடி சென்று உணவளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2018, 7:01 pm
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த மூதாட்டிக்கு, வீடு தேடி சென்று உணவளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Samayam Tamil ஏழை மூதாட்டியின் குடிசைக்கு சென்று விருந்தளித்த மாவட்ட ஆட்சியர்!!
ஏழை மூதாட்டியின் குடிசைக்கு சென்று விருந்தளித்த மாவட்ட ஆட்சியர்!!


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அனைத்து மக்களையும் நேரில் சந்தித்து மனுக்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள் என்ற 80 வயது மூதாட்டி, முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்தார். அப்போது, ஆட்சியர் அன்பழகனிடம், தனக்கு சொந்தங்கள் யாரும் இல்லை எனவும், குடிசை வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் கூறினார். மேலும், ‘ஒரு வேளை நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை, உன்னை எனது மகனாக நினைத்து கேட்கிறேன் எனக்கு உதவி செய் ராசா’ என்று ஆட்சியரிடம் கண்கலங்கினார். உடனே, ஆட்சியர் அன்பழகன் அவருக்கு உதவித்தொகை உடனே வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், மூதாட்டி ஒரு வேளை நல்ல சாப்பாட்டைக் கூட சாப்பிட்டதில்லை எனக் கூறியது மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு நெருடலை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து, அவருக்கு ஒருவேளையாவது வயிறார நல்ல உணவு கொடுக்க வேண்டும் என விரும்பிய அவர், தனது வீட்டில் விருந்து சமைத்து, அந்த மூதாட்டியின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ஆட்சியர் தனது வீட்டிற்கு வருவதைப் பார்த்த அந்த மூதாட்டி ஆனந்த அதிர்ச்சியடைந்தார். அவரிடம், உங்களுக்காக உணவு கொண்டு வந்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அதற்கு, அந்தப் பாட்டி எனது குடிசைக்கு வந்து உணவு உண்ண வேண்டும் என ஆட்சியரை அழைத்தார். உடனே, ஆட்சியரும் அவரது குடிசைக்கு சென்று அவருடன் ஒன்றாக அமர்ந்து, தான் கொண்டு வந்த உணவைப் பரிமாறி சாப்பிட்டார். பின்னர், தான் கொண்டு வந்த முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை அந்த மூதாட்டியிடம் ஆட்சியர் கொடுத்தார்.

ஆட்சியரின் இந்த செயலை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். இதன்பின், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

அடுத்த செய்தி