ஆப்நகரம்

முள்ளம்பன்றியை பிடிக்கச் சென்றவர் மூச்சு திணறி உயிரிழப்பு!

கேரளாவில் முள்ளம்பன்றியை பிடிக்க குகைக்குள் சென்றவர் மூச்சு திணறி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 12:47 pm
கேரளாவில் முள்ளம்பன்றியை பிடிக்க குகைக்குள் சென்றவர் மூச்சு திணறி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil kerala porcupine man died


கேரள மாநிலம் காசர்கோடு உப்பளா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45). இவர் அங்குள்ள பொசடி என்ற மலைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மலைப்பகுதியில் ஒரு முள்ளம்பன்றி சுற்றித்திரிவதை பார்த்த ரமேஷ், அதை வேட்டையாடலாம் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது நண்பர்கள் மறுத்துவிட்டனர்.
இருந்த போதிலும் நண்பர்கள் பேச்சைக் கேட்காமல் ரமேஷ் முள்ளம்பன்றியை பிடிக்க அதை பின்தொடர்ந்து சென்றார். ஆபத்தை உணர்ந்த முள்ளம்பன்றி அருகிலிருந்த குகைக்குள் சென்று விட்டது. இதைக் கண்ட ரமேஷ், தானும் குகைக்குள் சென்று முள்ளம்பன்றியை பிடித்து வருவதாக நண்பர்களிடம் சொல்லி விட்டு குகைக்குள் சென்றுவிட்டார்.
வெகுநேரமாகியும் ரமேஷ் திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குகைக்கு வெளியே நின்று ரமேஷை சத்தம் போட்டு கூப்பிட்டனர். பின்னர், நண்பர்களில் ஒருவர் மட்டும் குகைக்குள் சென்று ரமேஷை கூப்பிடுவதற்கு சென்றுள்ளார். குகைக்குள் பாதி தூரம் சென்றதும் மூச்சு திணறி அவருக்கு மயக்கம் ஏற்பட ஆரம்பித்தது. சுதாரித்துக் கொண்ட அவர் உடனே குகையில் இருந்து வெளியேறினார். ரமேஷூம் இதே போல் மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கலாம் என்று கருதிய நண்பர்கள் காசர்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்களோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பாதுகாப்பு உபகரணங்கள், மின்விளக்குடன் குகைக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த ரமேஷை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் வெளியே இருந்த போலீசார் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூச்சுத் திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி