ஆப்நகரம்

ரத்த தானம் செய்வதற்காக ரமலான் நோன்பை கைவிட்ட இளைஞர்

''பானுல்லா நோன்பை பாதியில் கைவிட்டு ரத்ததானம் செய்தது நெகிழ்ச்சி அடைய வைத்துவிட்டது. பானுல்லா நாங்கள், பதில் உதவியாக எதையாவது கொடுக்க நினைத்தோம். அவர் எதையுமே ஏற்கவில்லை.'' என்கிறார் நோயாளியின் உறவினர்.

Samayam Tamil 11 May 2019, 1:07 pm
ரத்த தானம் செய்வதற்காக ரமலான் நோன்பை கைவிட்ட இஸ்லாமிய இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Samayam Tamil 63527


அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த பானுல்லா அகமது என்ற 26 வயது இளைஞர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றுகிறார். அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றும் தபாஷ் பகவதி என்பவருடன் பானுல்லாவின் ஒரே அறையில் தங்கியுள்ளார்.

தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் முதலான சேவைகளைச் செய்பவர் தபாஷ் பகவதி. இவர் வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள ராஜன் என்ற நோயாளிக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக அறிந்துள்ளார்.

பல இடங்களில் முயற்சி செய்தும் ஓ பாசிட்டிவ் ரத்தம் கிடைக்காத நிலையில், தன்னுடன் வசிக்கும் நண்பர் பானுல்லாவிடம் யோசனை கேட்டிருக்கிறார். ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவைச் சேர்ந்த பானுல்லா தானே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

பானுல்லா ரமலான் நோன்பு இருப்பதால் அவரே ஏதும் சாப்பிடாமல் இருக்கும் நிலையில் ரத்தம் கொடுப்பது சரியல்ல என தபாஷ் மறுத்துள்ளார். நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவையாக இருப்பதை உணர்ந்த பானுல்லா, மருத்துவமனைக்குச் சென்று ஒரு யூனிட் ரத்த தானம் செய்துள்ளார்.

''பானுல்லா நோன்பில் இருப்பதால் ரத்தம் கொடுப்பதால் நோன்புக்கு தடை ஏற்படக்கூடாதே என நினைத்தேன். ஆனால் அவர் நோயாளியைக் காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, ரத்ததானம் செய்திருக்கிறார்.'' என தபாஷ் கூறுகிறார்.

''ரத்தம் கொடுக்க நான் தயார்தான். எங்கள் மத பெரியவர்களிடமும் கேட்டுக்கொண்டேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். ரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ளலாம் எனவும் அவர்கள் அறிவுரை கூறினார்கள்'' என பானுல்லா தெரிவிக்கிறார்.

''பானுல்லா நோன்பை பாதியில் கைவிட்டு ரத்ததானம் செய்தது நெகிழ்ச்சி அடைய வைத்துவிட்டது. பானுல்லா நாங்கள், பதில் உதவியாக எதையாவது கொடுக்க நினைத்தோம். அவர் எதையுமே ஏற்கவில்லை.'' என்கிறார் நோயாளியின் உறவினர். பானுல்லாவின் மனிதாபிமானம் மிக்க இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

அடுத்த செய்தி