ஆப்நகரம்

பனியின் தாக்கத்தை மீறியும் எடுபட்ட சுழற்பந்து : ஆரோன் ஃபிஞ்ச் கருத்து!

“உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனுபவத்தையெல்லாம் ஒன்று திரட்டி அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் விளாசினார். அவருடன் தொடக்க வீரராகக் களம் கண்டது அற்புதமான உணர்வை தந்தது.

Samayam Tamil 22 Sep 2020, 3:17 pm
ஐபிஎல் 13ஆவது சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் யுஸ்வேந்திர சஹலின் மிரட்டலான சுழற்பந்து காரணமாக 10 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலியின் படை வெற்றிபெற்றது.
Samayam Tamil aaron finch


இந்நிலையில், போட்டி குறித்து பேசிய ஆரோன் ஃபிஞ்ச், “மைதானத்தில் பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பந்து தாறுமாறாக சுழன்றது. இதனைப் பயன்படுத்தி சஹல் முக்கிய விக்கெட்டுகளை சுலபமாகக் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்” எனக் கூறினார்.

போட்டி ஹைதராபாத் அணிக்குச் சாதகமாகத் திரும்பியபோது, முக்கிய விக்கெட்களான ஜானி பேர்ஸ்டோ (61), விஜய் ஷங்கர் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் பெவிலியனுக்கு அனுப்பினார் சஹல். மொத்தம் 4 ஓவர்கள் வீசி, 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்

இதுகுறித்து பேசிய ஃபிஞ்ச், “இரவு தொடங்கியவுடன் பனிப் பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், மைதானம் பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறியது. பௌலர்கள் நினைத்தபடி பந்து திரும்பியதால், விக்கெட்களை சுலபமாகக் கைப்பற்றினர்” எனத் தெரிவித்தார்.

அம்பத்தி ராயுடுவின் ஓய்வு முடிவை மாற்றியமைத்த ஒரேயொரு போன் கால்!

சஹல் பற்றி கூறும்போது, “பயிற்சியில் அதிக நேரங்களைச் செலவிட்டார். அவரின் வெற்றிகரமான பந்து வீச்சுக்கு இதுவொரு காரணமாக இருந்தாலும், பனிப்பொழிவு சஹலின் சுழலுக்குக் கூடுதல் வலு சேர்த்தது. நெருக்கடியான நிலையிலும் சிறப்பாகப் பந்து வீசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வல்லமை சஹலுக்கு உள்ளது” எனக் கூறினார்.

பெங்களூரு அணியில் வழக்கமாக டிவிலியர்ஸ்தான் விக்கெட் கீப்பராக இருப்பார். ஆனால், இப்போட்டியில் அவருக்குப் பதில் ஜோஸ் பிலிப் கீப்பராக செயல்பட்டதற்குக் காரணம் என்னவென்று ஃபிஞ்சிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “டி வில்லியர்ஸ் நிறையப் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ஜோஸ் பிலிப் செயல்படக் காரணம் இருக்கிறது. பயிற்சியின்போது, பிலிப் கீப்பர் செய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அதனால், அவரை பயன்படுத்திப் பார்த்தோம்” என்றார்.

தொடக்க வீரராக களம் கண்டு 56 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல்லின் செயல்பாடுகள் குறித்தும் ஃபிஞ்ச் பேசினார். “உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனுபவத்தையெல்லாம் ஒன்று திரட்டி அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் விளாசினார். அவருடன் தொடக்க வீரராகக் களம் கண்டது அற்புதமான உணர்வை தந்தது. அவருக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், இப்போது விளையாடியதுபோல் பதற்றம் இல்லாமல், பந்து வீச்சாளர்களை கண்டு அசஞ்சாமல் விளையாட வேண்டும் என்பதுதான். அது அவரால் முடியும்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்