ஆப்நகரம்

ஆம்புலன்ஸை நிறுத்தி, ஐபிஎல் வாகனத்தை அனுமதித்த போலிசார்: வலுக்கும் கண்டனம்!

ஐபிஎல் வீரர்களை அழைத்துச் செல்லும் வாகனம் தடையின்றி செல்வதற்காக, ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய அகமதாபாத் காவல்துறைக்குக் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Samayam Tamil 5 May 2021, 3:41 pm
மருத்துவ பாதுகாப்பு வட்டத்தை (பயோ பபுள்) கடைப்பிடித்து நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் கொரோனா நுழைந்ததால், 14ஆவது சீசன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
Samayam Tamil ஐபிஎல்


இந்நிலையில், வீரர்களின் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை போலிசார் தடுத்து நிறுத்தி வைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடர் கடைசியாக டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெற்று வந்தது. தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் வீரர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அகமதாபாத் நகரத்தின் பஜ்ரபோல் என்னும் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை 3 பேருந்துகள் ஏற்றி சென்றன. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பயணத்திற்கு இடையூறாக இருந்த வாகனங்களை அனைத்தையும் நிறுத்திவிட்டு, ஐபிஎல் வாகனங்களை மட்டும் அனுமதித்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்களில் ஆம்புலன்ஸும் இருந்தது. இதனை ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.

இந்த வீடியோ உடனே வைரலானது. இந்நிலையில், ஐபிஎல் வீரர்களுக்காக ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய அகமதாபாத் காவல்துறைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து அகமதாபாத் ஐஜி மயங்சிங், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மை கிடையாது. ஐபிஎல் வீரர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி. எப்பேர்ப்பட்ட விஐபிகள் வந்தாலும் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட மாட்டாது. இறுதி சடங்கிற்குச் செல்லும் வாகனத்தைக் கூட காவலர்கள் தடுத்து நிறுத்த மாட்டார்கள்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஐபிஎல் வீரர்களுக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக வெளிவந்த தகவல் குறித்து அப்பகுதி காவலர்களிடம் விளக்கம் கேட்டேன். ஐபிஎல் வீரர்கள் 3 பேருந்துகளில் சென்றனர். கடைசி பேருந்து வேகமாகச் சாலையை கடக்கும்போதுதான் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த நேரத்தில் பேருந்தை தடுத்து நிறுத்தியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும். அதனால்தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த ஆம்புலன்ஸ் அவசரத்திற்கான சைரன் சத்தத்தை எழுப்பவில்லை” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்