ஆப்நகரம்

பேர்ஸ்டோ செய்த அந்த ஒரு தவறால் வெற்றி வாய்ப்பை இழந்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் ஹைதராபாத் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது பற்றி விரிவாக காணலாம்.

Samayam Tamil 22 Sep 2020, 11:06 am
பேர்ஸ்டோ, சஹலிடம் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்திருந்தால் ஹைதராபாத் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என்றே கூறப்படுகிறது. ஹைதராபாத் அணிக்கு கடைசி 5 ஓவர்களுக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் சஹலை ஆயுதமாகப் பயன்படுத்தினார் கோலி. ஸ்பின்னிற்கு சாதகமான மைதானத்தில் சஹலை, பேர்ஸ்டோ கொஞ்சம் நிதானமாகக் கையாண்டிருந்தால், போட்டி நிச்சயம் ஹைதராபாத்திற்கு ஆதரவாக திரும்பிருக்கும் என்று கருதப்படுகிறது. டாஸ் வென்று களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தேங்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் நல்லமுறையில் சோபித்தனர். அறிமுக போட்டியிலேயே படிக்கல் அதிரடி காட்ட ஃபிஞ்ச் நிதானத்தை கடைபிடித்தார்.
Samayam Tamil SRH vs RCB


பவர் பளே ஓவர்களில் 53 ரன்கள் சேர்த்த இவர்கள், 10ஆவது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடினர். படிக்கல் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். மற்றவர்கள் சரியாக சோபிக்கவில்லை. டிவில்லியர்ஸ் டெத் ஓவர்களில் ஓரளவுக்கு அதிரடி காட்டி 51 ரன்கள் சேர்த்தார். இருவரின் தயவால் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கிய சன் ரைசர்ஸ், தொடக்கத்தில் எதிர்பாராத திருப்புமுனையைச் சந்தித்தது.

1.4ஆவது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்து, பவுலர் உமேஷ் யாதவ் கையில்பட்டு எதிர்முனை ஸ்டெம்பில் விழுந்தது. வார்னர் ரன் ஓடுவதற்காக கிரிஸை விட்டு வெளியே நகர்ந்ததால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். மணீஷ் பாண்டேவும், பேர்ஸ்டோவும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். 11ஆவது ஓவர் வரை தாக்குப்பிடித்து விளையாடிய மணீஸ் பாண்டே கடைசியில் சஹாலிடம், 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வீழ்ந்தார்.

சஹலின் மாயாஜால சுழலில் சிக்கிய ஹைதராபாத்...பெங்களூரு அணி அபார வெற்றி!

கடைசி 5 ஓவர்களுக்கு 43 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமயோசிதமாகச் செயல்பட்ட கேப்டன் கோலி, மீண்டும் சஹலை பயன்படுத்தினார். சுழலுக்கு சாதகமாக அமைந்த அந்த மைதானத்தில் சஹலின் பந்தை பேர்ஸ்டோ அடித்து ஆட முற்பட்டு போல்ட் ஆனார். நடு வரிசையில் இளம் பேட்ஸ்மன்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று தெரிந்தும் பேர்ஸ்டோ தவறான ஷாட் ஆடி போல்ட் ஆனதுதான் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களால் பரபரப்பான கட்டத்தில் சிறப்பாக சோபிக்க முடியவில்லை. டெத் ஓவர்களில் டேல் ஸ்டெய்ன், சைனி, ஷிவம் துபே போன்றவர்கள் மிரட்டலாகப் பந்து வீசியதால் அடைத்து விக்கெட்களும் மளமளவென சரிந்தது. இறுதியில் ஹைதராபாத் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய யுஸ்வேந்திர சஹலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்