ஆப்நகரம்

சூர்யகுமார், ஷ்ரேயஸ் ஐயர் வேண்டாம்: 4ஆவது இடத்தை இவருக்கு கொடுங்க: இர்பான் பதான் பளிச்!

சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயருக்கு 4ஆவது இடத்தை கொடுக்க கூடாது என இர்பான் பதான் பேசியுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2022, 10:51 am
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபரில், ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெறவுள்ளது.
Samayam Tamil இர்பான் பதான்


இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதில், ஐபிஎல் 15ஆவது சீசன் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவோர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய அணி தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வீரர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

அணித் தேர்வுக்குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் டி நடராஜன், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், சஹல், குல்தீப் போன்ற வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, காயம் காரணமாக 6 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவந்த ஹார்திக் பாண்டியா 15ஆவது சீசனின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 6 போட்டிகளில் 295 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். பட்லர் (491), ராகுல் (368) ஆகியோர் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகிறார்கள். ஹார்திக் பாண்டியா இப்படி அதிரடி காட்டுவதற்கு முக்கிய காரணம், அவர் தற்போது டாப் ஆர்டரிலேயே களமிறங்கி விடுகிறார். முன்பு பினிஷிங் ரோலில் இருந்த அவர், தற்போது டாப் ஆர்டரில் களமிறங்கி ரன்களை குவிப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பதிலாக 4ஆவது இடத்தில் ஹார்திக் பாண்டியாவை களமிறக்க வேண்டும் என இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

இர்பான் பதான் பேட்டி:

இதுதொடர்பாக தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இர்பான் பதான், “டாப் ஆர்டரில் களமிறங்கி ஹார்திக் பாண்டியா கலக்கி வருகிறார். இது அவரின் சிறந்த வெர்சனாக இருக்கிறது. 4ஆவது இடத்தில் பொறுப்புடன் விளையாடி வருகிறார். அனைத்து பந்துகளையும் அடித்து விளையாடாமல், மோசமான பந்துகளை மட்டும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு, எதிரணி பௌலர்களுக்கு அழுத்தங்களை உருவாக்குகிறார்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “குஜராத் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணியிலும் ஹார்திக் 4ஆவது இடத்தில் களமிறங்க வேண்டும். அப்படி நடந்தால் அது நமக்கு மிகப்பெரிய நன்மைதான். தேர்வுக்குழுவினர் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியில் 4ஆவது இடத்திற்கு ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், இர்பான் பதானின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்