ஆப்நகரம்

நாகர்கோடிக்கு கஷ்ட காலங்களில் உதவிய திராவிட்: பயிற்சியாளர் உருக்கம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிரட்டலாகப் பந்து வீசியதுபோல், தற்போது ஐபிஎல் 13ஆவது சீசனிலும் பேட்ஸ்மேன்களை கமலேஷ் நாகர்கோடி மிரட்டி வருகிறார்.

Samayam Tamil 2 Oct 2020, 10:27 am
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த கமலேஷ் நாகர்கோடி, அதிலிருந்து மீண்டு வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் 2 விக்கெட்களையும், அபாரமான கேட்ச்களையும் பிடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தார். காயத்தால் அவதிப்பட்ட கமலேஷ் நாகர்கோடிக்கு, ராகுல் திராவிட் மட்டும் உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால், கமலேஷின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று அவரின் பயிற்சியாளர் சுரேந்திர ரத்தோர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். “கமலேஷ் நாகர்கோடி, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை.
Samayam Tamil Kamlesh Nagarkoti


இது ராகுல் திராவிட்டின் கவனத்திற்குச் செல்லவே, உடனே பிசிசிஐயிடம் இதுதொடர்பாக பேசி, கமலேஷ் நாகர்கோடியை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு திராவிட், கமலேஷை சந்திக்கும் போதெல்லாம் ஊக்கமளிக்கக் கூடிய வகையில் பேசுவார். கிரிக்கெட் பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுப்பார். கிரிக்கெட் வாழ்க்கையில் காயங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்று.

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என கமலேஷிடம் அடிக்கடி ஆறுதல் அளிக்கும் வகையில் பேசுவார்” என கமலேஷ் நாகர்கோடியின் பயிற்சியாளர் சுரேந்திர ரத்தோர் தெரிவித்தார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து, தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக ராகுல் திராவிட் உள்ளார்.

ஐபிஎல் 2020: 5000 ரன்களை குவித்து ரோஹித் ஷர்மா சாதனை!

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கமலேஷ் நாகர்கோடியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. சுமார், இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அணியில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

காயத்தில் இருந்து மீண்டதும் நாகர்கோடி, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால்தான் தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார் எனப் பயிற்சியாளர் சுரேந்திர ரத்தோர் தெரிவித்தார். “காயத்தால் அவதிப்பட்டு வந்த கமலேஷ் நாகர்கோடி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் உலகிற்குத் திரும்பியபோது தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.

இருப்பினும், தனது விடாமுயற்சியைக் கைவிடாத அவர் ஊரடங்கு சமயத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். சிறு தவறுகள் அனைத்தையும் திருத்திக்கொண்டு தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்